Also Watch
Read this
By: Manigandan Raja

சிவகாசி அருகே கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கிருஷ்ணா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 200 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் பட்டாசு மூலப் பொருட்களை கலவை செய்வதற்கான இயந்திரத்தை பொருத்திக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ரசாயன கலவையில் உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டது.
விபத்து குறித்து தகவலறிந்து சென்ற சிவகாசி தீயணைப்பு துறையினர் 2 வாகனங்கள் மூலம் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்தில் ஆலையின் போர்மேன் சிவகாசி தெற்கு தெருவை சேர்ந்த பாலமுருகன் 45, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இயந்திரத்தை பொருத்திய தனியார் நிறுவன பொறியாளரான திருநெல்வேலியைச் சேர்ந்த அகமது இப்ராஹிம் 42, என்பவர் 100% தீக்காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தீ விபத்து தொடர்பாக எம்.புதுப்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved