Also Watch
Read this
கள்ளக்குறிச்சி அருகே கம்பு காட்டில் காவல் காக்க சென்ற 70 வயது மூதாட்டி, மர்மக் கும்பலால் அடித்துக்கொ* செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மூதாட்டி அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளை அடிப்பதற்காகவே இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மாயமான மூதாட்டி
விளைவித்த கம்பு பயிரை குருவிகளிடம் இருந்தும் விலங்குகளிடம் இருந்தும் காப்பாற்ற, இரவெல்லாம் காட்டிலேயே தங்கி காவல் காப்பது கிராமத்து மக்களின் வழக்கம். ஆனால், அதே காட்டுக்காவல் ஒரு மூதாட்டியின் உயிரையே பறிக்கும் கொடூரமான முடிவாக மாறும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வரஞ்சரம் அருகே உள்ள மலைக்கோட்டாலம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி 70 வயதான விருத்தாம்பாள். இவர் வழக்கம்போல கடந்த 29ஆம் தேதி மாலை தனது கம்பு பயிரை பார்ப்பதற்கும், குருவிகளை விரட்டுவதற்கும் தனக்கு சொந்தமான காட்டுக்கு சென்றுள்ளார். இரவாகியும் தாய் வீடு திரும்பாததால், பதைபதைத்து போன அவரது 5 மகள்களும், உறவினர்களுடன் சேர்ந்து கையில் டார்ச் லைட்டுகளோடு வயல்வெளிகள் முழுவதும் சல்லடை போட்டு தேடினார்கள். ஆனால், எங்கு தேடியும் விருத்தாம்பாள் கிடைக்கவில்லை.

கொடூரம், நகைகள் மாயம்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பக்கத்து காட்டுக்காரர்கள் வழக்கம்போல் வயலுக்கு சென்றனர். அப்போது, அங்கு அவர்கள் கண்ட காட்சி ஒட்டுமொத்த கிராமத்தின் நாடி, நரம்புகளையும் உறைய வைத்துவிட்டது. கம்புக்காட்டின் நடுவே, தலையில் பலத்த காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் துள்ளத்துடிக்க கொ* செய்யப்பட்டு சடலமாக கிடந்தார் விருத்தாம்பாள். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்களும், உறவினர்களும் மூதாட்டி சடலமாக கிடப்பதை பார்த்து கண்ணீர்விட்டு கதறினர். உற்றுப் பார்த்தபோதுதான், அந்த பகீர் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. மூதாட்டியின் கழுத்தில் கிடந்த தாலி செயின், காதில் இருந்த கம்மல், மூக்குத்தி மற்றும் காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு என அனைத்தும் மாயமாகியிருந்தன.

காவல்துறை விசாரணை
மூதாட்டி தனியாக காட்டில் இருப்பதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவர் அணிந்திருந்த நகைகளை கொள்ளை அடிப்பதற்காகவே அவரை ஆயுதங்களால் கொடூரமாக தாக்கி படுகொ* செய்துவிட்டு தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர் கிராம மக்கள். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வரஞ்சரம் காவல்துறையினர், மூதாட்டி சடலத்தை கைப்பற்றி கூராய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணையில் இறங்கினர்.

அதிர்ச்சி, அச்சம்
நகையை கொள்ளை அடிப்பதற்காகவே இந்த கொ* செய்யப்பட்டுள்ளதா? அல்லது இந்த கொடூரத்திற்கு பின்னணியில் வேறு ஏதேனும் நிலப் பிரச்சினையோ, முன் விரோதமோ இருக்கிறதா? என்ற பல்வேறு கோணங்களில் மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் களத்தில் இறங்கி விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர் போலீசார். காவலுக்கு சென்ற இடத்தில் மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், கிராம மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved