Also Watch
Read this
கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான மோதலில் 3ஆம் ஆண்டு மாணவர் அடித்துக் கொ* செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக 5 மாணவர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர்கள் இடையே தகராறு
கோவையில் தனியார் பொறியியல் கல்லூரி மாணவர், சக மாணவர்களுடன் ஏற்பட்ட மோதலில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதன் என்ற இளைஞர், கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். கல்லூரிக்கு அருகே நண்பர்களுடன் தங்கி வந்த நிலையில், மலுமிச்சம்பட்டி அடுத்த ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் அமுதனுக்கும், சக மாணவர்கள் சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அமுதன் உயிரிழப்பு
தகராறு முற்றிய நிலையில், அமுதனை சில மாணவர்கள் கடுமையாக தாக்கியதாகவும், பின்னர் அவர் தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. அறையில் அமுதன் மயங்கிய நிலையில் கிடந்ததை பார்த்த நண்பர்கள், உடனடியாக சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அமுதன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் விவகாரம்?
இதையடுத்து, அவரது உடல் கூராய்வுக்காக கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. தகவல் அறிந்த செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், அமுதன் உள்ளிட்ட 8 மாணவர்கள், 2 நாட்களுக்கு முன்பு ஒத்தக்கால்மண்டபம் பகுதியில் மற்றொரு கல்லூரி மாணவர்கள் தங்கியிருந்த அறைக்கு முகமூடி அணிந்து சென்றதாகவும், அங்கிருந்த மாணவர்களை மிரட்டி போதைப்பொருள் கேட்டதுடன், சில செல்போன்களையும் பறித்துச் சென்றதாகவும் தெரியவந்துள்ளது.

தனியே அழைத்துச் சென்று...
இதையடுத்து, அந்த மாணவர்களை மற்றொரு தரப்பு மாணவர்கள் தேடி வந்ததாக தெரிகிறது. அந்த சம்பவத்தில் அனைவரும் முகமூடி அணிந்திருந்த நிலையில், அமுதனின் முகமூடி மட்டும் சற்று விலகியிருந்ததால் அவரை அடையாளம் கண்டு தேடி வந்த மாணவர்கள், அமுதனை தனியாக அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு அறைக்கு கொண்டுசென்று விடப்பட்ட அமுதன், சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதுதான் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்த மாணவரின் உடலைக் கண்டு அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

ஐந்து மாணவர்கள் கைது
அமுதன் கல்லூரி தொடங்கிய நாள் முதலே முறையான வருகைப் பதிவுடன் கல்லூரிக்கு வராமல் இருந்ததாகவும், இதனால் கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோரை அழைத்து தகவல் தெரிவித்து, அவர்களுடன் அமுதனை அனுப்பி வைத்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், கடந்த மாதம் 24ஆம் தேதி முதல் அமுதன் கல்லூரிக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் தாக்குதலில் முடிந்து, அமுதன் உயிரிழந்து உள்ளார். சம்பவம் தொடர்பாக 5 மாணவர்களை கைது செய்த செட்டிபாளையம் போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved