Also Watch
Read this
By: Manigandan Raja

போலி ஃபேஸ்புக் கணக்கு:
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் என். மிருணாளினி பெயரும், புகைப்படமும் பயன்படுத்தி போலி முகநூல் கணக்கு உருவாக்கி, பலரிடமும் பணம் கேட்டு மோசடி
செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியரின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தைப் போலவே தோற்றமளிக்கும் இந்த போலி கணக்கு மூலம், மெசஞ்சர் வழியாக தொடர்புகொண்டு அவசரத் தேவையை காரணம் காட்டி
ரூ.50,000 வரை பணம் அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்தேகத்திற்கிடமான தகவலை பெற்ற ஒருவர், உரையாடலை தொடர்ந்து மேற்கொண்டு விசாரித்தபோது, ஜார்கண்ட் மாநிலம் ஜன்பாத் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல்
வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புமாறு கூறப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட ஆட்சியர் தரப்பில் உடனடியாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. “என் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி போலி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளது.
பணம் கேட்டு வரும் எந்த செய்திக்கும் பொதுமக்கள் பதிலளிக்க வேண்டாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டு, குற்றவாளிகளை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போலி கணக்குடன் தொடர்புடைய தொலைபேசி எண் வெளிநாட்டு இணைப்பை கொண்டதாகவும், ஜார்கண்ட் மாநில சைபர் குற்ற கும்பல்களின் தொடர்பு இருப்பதற்கான
சாத்தியம் இருப்பதாகவும் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் வரும் பணம் தொடர்பான எந்த கோரிக்கையையும் சரிபார்க்காமல் ஏற்க வேண்டாமெனவும், பொதுமக்கள் அதிக கவனம் செலுத்த
வேண்டுமெனவும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இணைய மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து இத்தகைய கும்பல்களின் வலையில் சிக்காமல் இருப்பதே
முக்கியம் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved