Also Watch
Read this
By: Manigandan Raja

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
முக்கிய ஆடி அமாவாசை திருவிழாவான பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 12 மற்றும் 13-ஆம் தேதிகளில் வெகு விமரிசையாக நடைபெற்றன. திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், தங்குமிடம், கழிவறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன. மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதி மற்றும் அங்குள்ள வனவிலங்குகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள், சில்வர் கவர் பேக்கிங் பொருட்கள், குட்கா, பான்பராக் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள், பீடி, சிகரெட் மற்றும் மதுபாட்டில்களை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது.
இதையடுத்து பாபநாசம் வனச்சோதனைச் சாவடியில் வனம் மற்றும் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். தடையை மீறி பக்தர்கள் கொண்டு வந்த பிளாஸ்டிக் பொருட்கள்,
புகையிலைப் பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
திருவிழா நிறைவடைந்ததைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் சோதனைச் சாவடியில் முறையாக தரம் பிரிக்கப்பட்டன. இதில் பிளாஸ்டிக் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய கழிவுகள் தனியாகப் பிரிக்கப்பட்டு விக்கிரமசிங்கபுரம் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. மேலும், பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் வனத்துறை அதிகாரிகளால் உரிய முறையில் அப்புறப்படுத்தப்பட்டு அவைகள் முறையாக அழிக்கப்பட்டன.
வனப்பகுதியை பிளாஸ்டிக் மற்றும் மதுபாட்டில் கழிவுகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் வனத்துறையினர் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் சொரிமுத்து அய்யனார் கோவில் பகுதிகளில் குடியில் அமைத்து பக்தர்கள் தங்கி இருந்து அவர்கள் விட்டு சென்ற கழிவு பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved