Also Watch
Read this
தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி கோவை கொடீசியா மைதானத்தில் பிரச்சாரம் செய்தார்.

அப்போது, மகளிருக்கு இட ஒதுக்கீடு கொண்டு வருவதை திமுக விரும்பவில்லை என குற்றம்சாட்டிய பிரதமர், ஏப்ரல் 23ஆம் தேதி திமுகவிற்கு மகளிர் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கோவையில் பிரதமர் மோடி
மகளிருக்கு இடஒதுக்கீடு கொண்டு வருவதை திமுக விரும்பவில்லை என குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, கருப்பு உடை அணிந்து தீய எண்ணங்களுக்கு திரைபோடும் திமுகவினர் நீண்ட காலத்திற்கு தப்ப முடியாது என ஆவேசமாக கூறினார். தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக மாற்றி பேசுவதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, சாதாரண பெண்கள் உயர்ந்தால், குடும்ப கட்சிகளான காங்கிரசுக்கும், திமுகவிற்கும் ஏன் எரிகிறது? என காட்டமாக கேள்வி எழுப்பினார்.

பொன்னான வாய்ப்பை மறுத்தது ஏன்?
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்த்து, பெண்களுக்கான பொன்னான வாய்ப்பை மறுத்தது ஏன்? என்று, திமுகவினரை பார்த்து மக்கள் கேள்வி கேட்க வேண்டும் என கூறிய பிரதமர் மோடி, ஏப்ரல் 23ஆம் தேதி திமுகவிற்கு மகளிர் சரியான பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, யார் அதிகமாக கொள்ளை அடிக்கிறார்கள் என்பதில் திமுக குடும்பத்தில் மகனுக்கும் மருமகன் இடையே போட்டி நடப்பதாக விளாசியவர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், எம்பிக்கள் என அனைத்து பதவிகளையும் திமுகவில் ஒரே குடும்பத்தினர் வகிப்பதாக விமர்சனம் செய்தார்.

அரசியல் ரீதியாக பழி வாங்க...
டாஸ்மாக் ஊழல் செய்த அரசியல்வாதியை கோவைக்கு அனுப்பி அரசியல் ரீதியாக பழிவாங்க திமுக முயற்சிப்பதாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, ஒவ்வொரு குடும்பமும் 2 ஆயிரம் ரூபாய் மிச்சப்படுத்தும் வகையிலான பிரதமரின் சூரிய மின்சக்தி திட்டத்தை கோவையில் முறையாக செயல்படுத்தவில்லை என்றும் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved