Also Watch
Read this

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு தெரிவிக்க மறுத்ததற்காக வருங் காலத்தில் அதற்கான அரசியல் ரீதியான விளைவுகளை எதிர்க்கட்சிகள் நிச்சயம் சந்திக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்க்க வேண்டும்
டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின் போது இடஒதுக்கீடு மசோதா குறித்து பேசிய பிரதமர் மோடி, தங்களது செயலை மறைப்பதற்காக எதிர்க்கட்சிகள் தற்போதே பல்வேறு காரணங்களை தேடிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார். ஆனால் அதற்குள், எதிர்க்கட்சிகள் பெண்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டவை என்பதை நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என அமைச்சர்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

பாஜகவின் முதல் தோல்வி - பிரியங்கா காந்தி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியடைந்த நாள் NDAவிற்கு கறுப்பு நாள் என்ற காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, பாஜக முதல் முறையாகத் தோல்வியைச் சந்தித்துள்ளதாக கூறியுள்ளார். டில்லி காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், இது ஜனநாயகத்திற்கு கிடைத்த பெரும் வெற்றி என வர்ணித்தார். இந்த முடிவு எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பிரதிபலிப்பதாகவும், ஆளும் கட்சியின் சதித்திட்டத்திற்கு கிடைத்த பலத்த அடி எனவும் கூறிய பிரியங்கா, இது மகளிர் இடஒதுக்கீடு என்பதைத் தாண்டி, பாஜகவின் தன்னிச்சையான செயல்பாடின் வெளிப்பாடு என்றும் கூறினார்.

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்று நாள் சிறப்பு அமர்வு கடந்த 16ஆம் தேதி கூடியது. அன்றைய தினமே தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.

2ஆவது நாள் வரை விவாதம் நீடித்த நிலையில், கடைசியில் வாக்கெடுப்பு மூலம் மூன்று மசோதாக்களும் மக்களவையில் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மூன்றாவது நாளான இன்று ஏப்ரல் 18ஆம் தேதி, நாடாளுமன்றம் கூடிய சில நிமிடங்களில், இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved