Also Watch
Read this
’நான் கமல் படம் செய்கிறேன்,' என்று ரஜினி தூங்காமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். எனக்காக அவர் வேலை பார்க்கிறார் என்று, கமல்ஹாசன் நெகிழ்ச்சி தெரிவித்தார்.

ரஜினியின் 173ஆவது படம்
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 173ஆவது திரைப்படத்தின் பெயர் தர்மன் என அறிவிக்கப்பட்டு உள்ளது. The deadly doctor என்ற வார்த்தைகளுடன் கையில் கத்தியும் ரத்தமுமாக ரஜினி நிற்பது போன்ற ஸ்டைலிஷ் போஸ்டர் வெளியாகி உள்ளது. ராஜ்கமல் நிறுவனம் சார்பில், கமல்ஹாசன் மற்றும் மகேந்திரன் தயாரிக்கும் இந்த படத்தில் சிம்ரன், ராக்சி கண்ணா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா இன்று ஜூன்24ஆம் தேதி, சென்னை ராஜ்கமல் அலுவலகத்தில் நடைபெற்றது.

ரஜினியும் நானும்
இந்த நிகழ்வில், நடிகரும் தயாரிப்பாளருமான கமல்ஹாசன் பேசியதாவது;
இந்தப் படத்தைத் தயாரிக்கும் அளவிற்கு மார்க்கெட்டில், என்னை வைத்திருந்ததற்கு நன்றி. ரஜினி ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரங்களில் தான் நடித்து வந்தார். இரண்டு படங்களில் இருவரும் ஒரே நிலைக்கு வந்துவிட்டோம். அப்போது, நாங்கள் இருவரும் முடிவு செய்தோம். 'நீங்கள் தயாரிக்கணும், நான் நடிக்கணும்' என்று ரஜினி கூறினார். இப்படித்தான் பேசி வந்தோம்.

40 ஆண்டுகளைக் கடந்து...
40 வருடம் கடந்துவிட்டது. ராஜ்கமல் ஆபீஸைத் திறந்து வைப்பதற்கும் ரஜினிதான் வந்தார். அப்போதும் நாங்கள் இருவரும் சேரும் படம் பற்றி ரஜினியிடம் கேட்டேன். இப்போது, இரண்டு படங்களை நாங்கள் செய்கிறோம். ஏ.வி.எம். நிறுவனத்தின் வேப்பமரத்தின் அடியில் அமர்ந்து வளர்ந்தவர்கள், இன்றைக்கு இங்கு வந்து உள்ளோம். இது, யாருடைய கருணை என்பது எங்களுக்குத் தெரியாது. நாங்கள் திரைத்துறைக்குள் வருவோம் என்று தெரியும். ஆனால், இவ்வளவு பெரியதாக நாங்கள் வருவோம் என்று, நினைக்கவில்லை.

ரஜினி தூங்கவில்லை...
'நான் கமல் படம் செய்கிறேன்' என்று, தூங்காமல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் ரஜினி. எனக்காக, ரஜினி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தயாரிப்பாளராக என்னுடைய பெயரைக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், வேலைகளை ரஜினியும் மகேந்திரனும்தான் செய்திருக்கிறார்கள்.

இன்னொரு சகோதரர்...
எனது சகோதரர் சந்திரஹாசனுடைய இரங்கல் கூட்டத்திற்கு வந்தபோது ரஜினி, 'இனி கமல் என்ன செய்யப் போகிறார்?' எனக் கவலைப்பட்டார். அப்போது நான் மகேந்திரனைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு இன்னொரு சகோதரர் கிடைத்து விட்டார் எனத் தோன்றியது.

சர்வதேச அளவில்..
இப்போது, அனைத்து பலத்தையும், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிடம் கொடுத்து உள்ளோம். இது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பது அவருக்குத் தெரியும். இசை அமைப்பாளர் அனிருத்தின் இசையை சினிமாவுக்கு மட்டுமல்ல, இப்போது கால்பந்து போட்டிக்கும் பயன்படுத்துகின்ற்றனர். அந்தளவிற்கு சர்வதேச அளவிற்கு அனிருத் உயர்ந்துவிட்டார்.
இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.