Also Watch
Read this
By: Web Team

தமிழக சட்டப்பேரவைக்கு 1952-ல் தேர்தல் நடைபெற்றதில் தொடங்கி, தற்போது 75 ஆண்டுகாலத்தை தொட்டுள்ள நிலையில், இதுவரை பேரவை நிகழ்வுகள் எதுவும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது கிடையாது. ஏதோ "தங்கமலை ரகசியம்" போல பொதுமக்களுக்கு தெரியாமலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்களுக்கும் சட்டப்பேரவைக்குள் ஏதோ பரம ரகசியம் பொதிந்துள்ளதாக நினைத்துக் கொண்டனர்.
எனவே, பேரவை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி, கடந்த 2012 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் விழிப்புணர்வுள்ள பொதுமக்கள், நீதிமன்றத்திற்கும் சென்றனர். ஆனால், அப்போதைய அதிமுக அரசு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இந்த சூழலில், 2021 தேர்தலின்போது சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும் என திமுக வாக்குறுதி அளித்தது.
அதன்படி, வெற்றிபெற்று ஆட்சியமைத்த திமுக, 7 மாதங்களுக்கு பிறகு 2022-ல் முதல் நேரலையை தொடங்கியது. ஆனாலும் ஆளுநர் உரை மற்றும் ஆண்டு பட்ஜெட் உரை தவிர, பேரவை நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு காண்பிக்கப்படாமல் முற்றிலும் தடை செய்யப்பட்டிருந்தன. அதிகபட்சமாக, முதலமைச்சரின் உரைகள், அமைச்சர்களின் குறுக்கீடுகள் மற்றும் குறிப்பிட்ட விவாதங்கள் மட்டுமே ஒளிபரப்பப்பட்டன.
அதாவது, அரசாங்கத்தால் எடிட் செய்து வழங்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வீடியோ தொகுப்புகள் மட்டுமே செய்தித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. எதிர்க்கட்சியினரின் காரசார விவாதங்கள் மற்றும் ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி இடையேயான வாக்குவாதம் போன்ற சமயங்களில் எல்லாம் நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. இதனால், ஆளும்கட்சிக்கு சாதகமான நிகழ்வுகள் மட்டும் ஒளிபரப்பப்படுவதாகவும், எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகள் புறக்கணிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதையும் படியுங்கள்: https://newstamil.tv/article/news/rajinikanths-next-film-tharman
இந்த நிலையில்தான், தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக த.வெ.க. ஆட்சியில், பேரவையின் நிகழ்வுகள் முழுமையாக நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. கடந்த 18-ம் தேதி கூட்டத்தொடர் தொடங்கியபோது நேரலை செய்யப்பட்ட நிலையில், மறுநாள் திடீரென துண்டிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, 22 மற்றும் 23ம் தேதி நடைபெற்ற பேரவை நிகழ்வுகள் அனைத்தும் முழுமையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. காலை தொடங்கி மதியம் வரை ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாமல் மக்கள் பார்வைக்கு நேரலையில் வழங்கப்பட்டது.
இந்த அதிசயத்தை ஏராளமான பொதுமக்கள் நேரலையில் கண்டு மகிழ்ந்தனர். சட்டப்பேரவை நிகழ்வு ஒன்று, பொதுமக்களால் அதிகம் பார்க்கப்பட்டதும், பகிரப்பட்டதும் இதுவாகத்தான் இருக்கும்.எனவே, இந்த நேரலையின் மூலம், தவெக அரசு "தங்கமலை ரகசியத்தை" உடைத்து விட்டதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் மட்டுமல்ல, அரசியல்வாதிகள் மத்தியிலும் இந்த நேரலை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுவே மாற்றம் என தவெகவினரும் சிலாகித்து வருகின்றனர்.
தவெக அரசு வெளிப்படைத்தன்மை உடைய அரசு என முதலமைச்சர் விஜய் பலமுறை கூறி வரும் நிலையில், அதனை மெய்ப்பிக்கும் விதமாகவே, சட்டப்பேரவை நிகழ்வு முழுவதும் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. பேரவையின் முழு நடவடிக்கைகளும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது குறித்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தாங்கள் வெளிப்படைத்தன்மையை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.
எது எப்படியோ, சட்டமன்றத்துக்கு நேரில் சென்று பேரவை நிகழ்வுகளை கண்டுகளிக்க முடியாத ஒரு சாதாரண கடைக்கோடி குடிமகனின் ஆசையை நேரலை மூலம் தவெக அரசு நிறைவேற்றியுள்ளது. இதனால், பொதுமக்கள் மத்தியில் விசில் சத்தமும் காதை பிளக்கிறது என்றால் மிகையல்ல.