Also Watch
Read this
புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் ஓட்டுப்போட வந்த வாக்காளர்களை பாவாடை தாவணி அணிந்து வரவேற்ற ரோபோட் நிலா அனைவரையும் கவர்ந்தது. விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் இதற்கு ஏற்பாடு செய்திருந்தது.
புதுச்சேரியில் தேர்தல்
யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் இன்று ஏப்ரல் 9ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி, சுமாராக 17.41% வாக்குகள் பதிவானது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

புதுச்சேரிக்கு வாக்குறுதிகள்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை முன் வைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்தனர். அமைதியான முறையில் வாக்குப்பதிவை நடத்த தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளைச் செய்து உள்ளது.

கவனம் ஈர்த்த தேர்தல் ஆணையம்
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் நிமித்தமாக புதுச்சேரியில் இரண்டும், காரைக்காலில் ஒன்றும் என 3 தனித்துவ வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த தனித்துவ வாக்குச்சாவடிகளில் வாழை மரம், தோரணம், தென்னை ஓலைப் பந்தல் என அழகுப்படுத்தப்பட்டு இருந்தது. இங்கு வாக்களிக்க வருவோரை பூ கொடுத்து ரோபோ வரவேற்க, பன்னீர் தெளித்து, செம்பருத்தி டீ தந்து வாக்காளர்களை பசுமை பந்தலில் அமர வைத்து அனைவரையும் புதுச்சேரி தனித்துவ வாக்குச்சாவடி கவர்ந்தது.

பேசு பொருளான வாக்குச்சாவடிகள்
புதுச்சேரியை இந்தியாவுடன் இணைக்க வாக்கெடுப்பு நடந்த கீழூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி, ராஜ்பவன் தொகுதியில் வஉசி அரசு மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் தந்தை பெரியார் பள்ளி ஆகியவை தனித்துவ வாக்குச்சாவடிகளாக அழகுப்படுத்தப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பேசு பொருளாகி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved