Also Watch
Read this
திமுக தான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமை என்று விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்.பி. தேர்தலில் கூட்டணி வைத்தது யார்? என்று கேள்வி எழுப்பியதோடு, தாம் டெல்லி சென்றாலே முதலமைச்சருக்கு நடுக்கம் என விமர்சித்து உள்ளார்.

சென்னையில் இபிஎஸ் தேர்தல் பிரச்சாரம்
சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு சேகரித்து அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது;
பாஜகவுக்கு அதிமுக அடிமை என்கிறார் ஸ்டாலின். நாம் அப்படியா இருக்கிறோம்? அதிமுக ஆட்சியை விமர்சிக்க ஆதாரமே இல்லை. அதனால் தான் இப்படி அவதூறு செய்கிறார். நாங்கள் அடிமையா? நாங்கள் எம்பி தேர்தலில் கூட்டணி வைத்தோமா? நீங்கள் தான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமை. அப்போது இந்தியா கூட்டணி என்றார், இப்போது மதச்சார்பற்ற கூட்டணி என்று மாற்றிவிட்டார். காலத்துக்கு ஏற்றபடி இரட்டை வேடம் போடுகிறார்.

இணக்கமாக இருந்தோம்
அதிமுக எந்த முடிவெடுத்தாலும் திடமான முடிவெடுக்கும். எம்ஜிஆர், அம்மா காலத்திலும் அப்படித்தான். அதிமுக கூட்டணி வலிமையானது, இயற்கையானது. இப்போது நடப்பது சட்டமன்ற தேர்தல் தானே? ஸ்டாலினுக்கு மட்டும் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் நடக்கும் தேர்தலாம். இப்படிப்பட்டவர் நாட்டை ஆளலாமா? அதிமுக ஆட்சியில் மத்திய அரசோடு இணக்கமாக இருந்தோம். அதனால் தான் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 63 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கினோம்.

மடியில் கனம் உள்ளது...
நான் டெல்லி சென்றால், இபிஎஸ் டெல்லிக்கு போகிறார் என்கிறார். நான் என்ன பாகிஸ்தானுக்கா போனேன்? பயப்படுகிறார், உங்களுக்கு மடியில் கனமுள்ளது, வழியில் பயமிருக்கிறது. அண்ணா பல்கலை பாலியல் சீண்டல், யார் அந்த சார்? அவரை கண்டுபிடித்துவிடலாம், அவர்தான் பிரியாணி சாப்பிட்டார். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மூலை முடுக்கெல்லாம் கஞ்சா கரைபுரண்டு ஓடுகிறது. போதை பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது தமிழ்நாடு. அதிமுக ஆட்சி அமைந்த மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும்.
இவ்வாறு பேசி, இபிஎஸ் வாக்கு சேகரித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved