Also Watch
Read this
By: Fyrose Banu

சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரியில் கழிவுநீர் கலக்கும் அவலம் தொடர்வதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர், சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரி உள்ளது.இந்த நிலையில் அம்பத்தூர் பானு நகர் 17வது ஆவென்யூ,ஒரகடம், கள்ளிகுப்பம், திருமுல்லைவாயில் ஆகிய குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் புழல் ஏரியை நோக்கிச் செல்லும் மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது.
இதனால் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான புழல் ஏரி மாசு அடைகிறது. குறிப்பாக கழிவுநீருடன் குப்பை மற்றும் கழிவுப் பொருட்களும் சேர்ந்து வடிகால்களில் தேங்கி, அந்த நீர் நேரடியாக ஏரி நோக்கி செல்கிறது. இதனால் மழைநீர் வடிகால் அமைப்பு தனது நோக்கத்தை இழந்து, கழிவுநீரை எடுத்துச் செல்லும் பாதையாக மாறி வருகிறது.

சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக விளங்கி வரும் புழல் ஏரியில் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியைச் சென்றடைவதால் நீரின் தரம் பாதிக்கப்படுவதுடன், நீர்நிலையின் சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. கழிவுநீர் தொடர்ந்து கலப்பதால் ஏரியில் துர்நாற்றம், நீரின் நிறம் மாறுதல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதுடன், நீர்நிலையில் உள்ள உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் எவ்வாறு கலக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட மாநகராட்சி மற்றும் குடிநீர்–கழிவுநீர் வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்.

மேலும் கழிவுநீர் இணைப்புகள் மழைநீர் வடிகாலுடன் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து, அவற்றை உடனடியாக துண்டிக்க வேண்டும் என்றும், மழைநீர் மட்டும் ஏரியை நோக்கிச் செல்லும் வகையில் வடிகால் கட்டமைப்பை சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய நீர்நிலையான புழல் ஏரியின் நீர்தரத்தை பாதுகாக்க, அதிகாரிகள் இனியும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved