Also Watch
Read this
By: Fyrose Banu

அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சிலிண்டர்கள் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதியடைந்துள்ள நிலையில் ஹோட்டல் தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் காரணமாக வளைகுடா நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. வளைகுடா நாடுகளில் இருந்து எரிவாயு வரத்து குறைந்து இந்தியா முழுவதும் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. 
வணிக சிலிண்டர்கள் வரத்து முற்றிலும் தடை
கடந்த மூன்று நாட்களில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் அறுபது ரூபாய் விலை ஏற்றம் கண்ட நிலையில் உணவகங்களுக்கு பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டர்கள் வரத்து முற்றிலும் தடைபட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக ஹோட்டல் தொழில் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
வணிக சிலிண்டர்களை விநியோகிக்க வேண்டாம்
சராசரியாக ஒரு விநியோகஸ்தர்களுக்கு இரண்டு லோடுகள் சிலிண்டர் வரப்பெற்ற நிலையில் தற்சமயம் ஒரு லோடு சிலிண்டர் மட்டுமே அனுப்பி வைக்கின்றனர் மேலும் விநியோகஸ்தர்கள் மருத்துவமனைகளுக்கு கேஸ் சிலிண்டர்கள் தேவைப்படும் பட்சத்தில் வழங்க வேண்டும் என்பதால் தங்களிடம் உள்ள வணிக சிலிண்டர்களை விநியோகிக்க வேண்டாம் எனவும் வாய்மொழியாக உத்தரவு வரப் பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
வேலை இழக்கும் அபாயம்
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்ட ஓரிரு நாட்களிலேயே தாக்குப் பிடிக்க முடியாமல் பல்வேறு உணவகங்கள் இழுத்து மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு நாட்களில் உணவகத் தொழிலை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, வெளியூர்களில் தங்கி வேலை பார்க்கும் அலுவலர்கள் பல்வேறு நிலையில் உள்ள தொழிலாளர்கள் மிகப்பெரிய பாதிப்பை சந்திப்பார்கள் எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கிட வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved