Also Watch
Read this
By: Manigandan Raja
இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறே காரணம், சாதிய மோதல் அல்ல என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையை அடுத்துள்ள இடைக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த ராஜூ என்பவரின் வீட்டிற்கு 3 இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியதில் 3 பேர் காயமடைந்த நிலையில், இந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி, தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், நாங்குநேரியில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இருவர் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து அதேபோல், ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்தவர்கள் மீது, வாளால் வெட்டி தாக்குதல் நடத்திய சம்பவத்தை கண்டித்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கை விடுத்தனர்.

காவல்துறை விளக்கம்
இந்த சம்பவம் தொடர்பாக, மானாமதுரை காவல் நிலையத்தில் வைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் செய்தியாளர்களை சந்தித்து சம்பவம் தொடர்பாக விளக்கமளித்தார். கடந்த மார்ச் 3ஆம் தேதி, மதியம் செட்டிகுளத்தை சேர்ந்த பாண்டியராஜ் மற்றும் புதுக்குளத்தை சேர்ந்த மகேஷ் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதனை அடுத்து அங்கிருந்த ராசு, இருவரையும் கண்டித்து அனுப்பியதாகவும், இதனை அடுத்து ஆத்திரத்தில் இருந்த புதுக்குளம் மகேஷ், தனது கூட்டாளிகளான 9 பேரை அழைத்துக் கொண்டு பாண்டியராஜின் வீட்டிற்கு சென்றதாகவும் கூறினார்.

வாய்த் தகராறே காரணம்
தன்னை கண்டித்து அனுப்பிய ராசுவை பார்த்து ஆத்திரத்தில் அவரை தாக்கியதாகவும் அந்த சமயத்தில் அதனை தடுக்க முயன்ற ராசுவின் உறவினர்களையும் மகேஷ் தரப்பினர் தாக்கியதுடன் அங்கிருந்து சென்று பாண்டியராஜின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர் என்றும் இவர்களுக்குள் எற்பட்ட வாய் தகராறிலேயே இந்த சம்பவம் நடைபெற்று உள்ளதாகவும் கூறினார்.

ஜாதிய மோதல் இல்லை
இந்த சம்பவத்தில், ஜாதிய மோதல் எதுவும் இல்லை என்றும், இதில் பாண்டியராஜ் மனைவி கொடுத்த புகாரின் பேரில், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், அதேபோல் ராசு கொடுத்த புகாரின் பேரில், மானாமதுரை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இருளப்பன், வேல்முருகன், பாலமுருகன், பாரதி, ஒரு சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், முதல் குற்றவாளியான மகேஷ் உட்பட இன்னும் 4 பேர் காவல் துறையினரால் தேடப்பட்டு வருவதாகவும் அவர்களையும் விரைந்து கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved