Also Watch
Read this
By: Manigandan Raja
நாங்குநேரி ரத்த ஈரம் காய்வதற்குள், சிவகங்கை அருகே அதேபோன்று மீண்டும் தாக்குதல் நடைபெற்று இருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டம் - ஒழுங்கை காக்க வேண்டிய முதலமைச்சர், தாம் காண்பித்த சைகை, வைரல் ஆகி விட்டதாக வெட்டிப் பெருமை பேசுகிறார் என்றும் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து இபிஎஸ் வெளியிட்ட அறிக்கை;
சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூர் கிராமத்திற்குள், இரு சக்கர வாகனங்களில் அரிவாள் மட்டும் பட்டாக் கத்திகளுடன் வந்த ஒன்பது மர்ம நபர்கள், கண்ணால் கண்டவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தி உள்ளதாக வரும் தகவல் அதிர்ச்சி தருகிறது. இதே மாதிரியான தாக்குதல் 2 நாட்களுக்கு முன்பு தான் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் நடந்தது. அதன் ரத்த ஈரம் காய்வதற்குள் அதே போன்றதொரு தாக்குதல் மீண்டும் நடக்கிறது என்றால், இவை சொல்லவரும் செய்தி என்ன?

யாரும் பயந்த மாதிரி தெரியவில்லை
திமுக அரசின், "குற்றவாளிகள் கைது" நடவடிக்கையை கண்டு குற்றவாளிகள் யாரும் பயந்த மாதிரியே தெரியவில்லை. பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் புகுந்து தைரியமாக இப்படி ஒரு கொலைவெறித் தாக்குதல் நடக்கிறது என்றால், இங்கே நடக்கும் சமூக அநீதி, திமுக அரசு இதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது என்று தானே மக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
இப்படி மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், சட்டம் - ஒழுங்கைக் காக்க வேண்டிய முதல்வர் என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா? "முடிந்துவிட்டது" என தான் காட்டிய சைகை, வைரல் ஆனதாக வெட்டி பெருமை பேசுகிறார்.

கடுமையான சட்ட நடவடிக்கை
உங்கள் ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு முடிந்து விட்டது. பெண்கள் பாதுகாப்பு முடிந்து விட்டது. சமூக நீதி முடிந்துவிட்டது. மொத்தத்தில், தமிழக மக்களின் நிம்மதியே முடிந்து விட்டது. இப்படி முடிந்து விட்டதை எல்லாம் திரும்பப் பெற ஒரே வழி, உங்களுடைய ஆட்சிக்கு முடிவு கட்டுவதே. அதை மிக விரைவில் தமிழக மக்கள் சிறப்பாக செய்ய காத்திருக்கின்றனர். இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலை வெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு இபிஎஸ் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved