Also Watch
Read this
ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் முக்கிய குற்றவாளி சுர்ஜித்தின் தாயாரும், காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவருமான கிருஷ்ணகுமாரியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

ஐடி ஊழியர் கவின் வழக்கு
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் கவின் செல்வகணேஷ், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞர். இவர் கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி திருநெல்வேலி கே.டி.சி.நகரில் காதல் விவகாரம் தொடர்பாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில், கவின் காதலித்ததாக கூறப்படும் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகிய 3 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு. தற்போது நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

தலைமறைவான கிருஷ்ணகுமாரி
இந்த வழக்கில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், சுர்ஜித்தின் தாயாரும் எஸ்.ஐயுமான கிருஷ்ணகுமாரி இதுவரை கைது செய்யப்படாமல் இருந்து வந்தார். இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையில், கிருஷ்ணகுமாரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடப்பட்டதுடன், அவர் ஆஜராகாததால் பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், கடந்த 26ஆம் தேதி நடைபெற்ற விசாரணை வரை கிருஷ்ணகுமாரி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் அவரை கைது செய்யாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியதுடன், உடனடி நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம், சிபிசிஐடி போலீசாருக்கு அறிவுறுத்தியது.

தலைமறைவான எஸ்ஐ கைது
இந்த சூழலில், தலைமறைவாக இருந்து வந்த எஸ்.ஐ. கிருஷ்ணகுமாரியை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே மூவர் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசாரால் தேடப்பட்டு வந்த கிருஷ்ணகுமாரி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதற்காக இன்று காலை பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அவர் அழைத்து வரப்பட்டார். அங்கு போலீஸ் உயர் அதிகாரிகள் பல்வேறு கோணங்களில் சரமாரியாக கேள்வி எழுப்பி, விசாரணை மேற்கொண்டனர்.

கதறி அழுத கிருஷ்ணகுமாரி
விசாரணையின் போது, காவல்துறையைச் சேர்ந்த தனக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டதாக கூறி, கிருஷ்ணகுமாரி உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார். தொடர்ந்து, விசாரணை நிறைவடைந்த பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திலிருந்து போலீசார் அழைத்துச் சென்றனர். அப்போது, அவர் தனது கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டு கண்ணீர் மல்க சென்றார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved