Also Watch
Read this
கிருஷ்ணகிரி அருகே 40 ஏக்கர் நிலத்தில், விதிகளை மீறி தோண்டப்படும் ராட்சச கிணறால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். அரசு அனுமதியுமின்றி, இரவோடு இரவாக அதிபயங்கர வெடிபொருட்களை பயன்படுத்தி பாறைகள் தளர்த்தப்படுவதால், வீடுகளின் சுவர்களில் ஆபத்தான விரிசல் ஏற்பட்டு, மக்கள் மரண பயத்தில் தூக்கமின்றி தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

நான்கு மாதங்களுக்கு முன்னர்...
கிருஷ்ணகி மாவட்டம், பர்கூரில் செயல்பட்டு வரும் PSV பொறியியல் கல்லூரியின் உரிமையாளர் செல்வம், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கல்லாவி மேட்டு தெரு பகுதியில் சுமார் 40 ஏக்கர் நிலத்தை வாங்கி உள்ளார். ஆரம்பத்தில், பிளாட் போட்டு விற்க திட்டமிட்டவர், கிராமப்புறப் பகுதி என்பதால் மனை விற்பனை சரிவர ஆகவில்லை. உடனே ரூட்டை மாற்றியவர், அந்த இடத்தை ஃபார்ம் ஹவுஸாக மாற்றி, விவசாய நிலமாக மாற்ற திட்டமிட்டிருக்கிறார்.

நிம்மதியற்ற வாழ்க்கை
இங்கிருந்து தான் தொடங்கியது அப்பகுதி மக்களின் நிம்மதியற்ற வாழ்க்கை. ஃபார்ம் ஹவுஸ் என்ற பெயரில், சுமார் 100க்கு 100 அடி அகலத்தில் பிரம்மாண்ட ராட்சச கிணறு வெட்டும் பணியை இரவோடு இரவாக தொடங்கிய கல்லூரி அதிபர் செல்வம். 200க்கும் மேற்பட்ட ஏழை எளிய குடும்பங்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு வெறும் 100 மீட்டர் தொலைவிலேயே இந்த பணிகள் இரவு பகலாக நடந்து வருகின்றன. கடினமான பாறைகளை உடைப்பதற்காக, எவ்வித அரசு அனுமதியோ முன்னெச்சரிக்கையோ இன்றி அதிபயங்கர வெடிபொருட்களை பயன்படுத்தி பாறைகளை தகர்த்து வருகின்றனர்.

கிராம மக்கள் அச்சம்
இந்த வெடி அதிர்வுகளால், சுற்றுவட்டார வீடுகள் நிலநடுக்கம் போல குலுங்குவதாகவும் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் கட்டிய வீடுகளின் சுவர்களில் பெரிய அளவில் பிளவுகளும் ஆபத்தான விரிசல்களும் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.

’எந்த நேரத்துல வீடு தலையில இடிஞ்சு விழுந்து உயிர் போகுமோ தெரியல, குழந்தைகளை வெச்சுகிட்டு இரவு முழுக்க தூங்காம பயத்துலயே தவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது,’ என அப்பகுதி மக்கள் குமுறுகிறார்கள்.

கிராம மக்கள் எச்சரிக்கை
பொறுமையை இழந்த பொதுமக்கள், கல்லாவி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நபர்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த சட்டவிரோத கிணறு வெட்டும் வேலையை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் புகாரில் கொந்தளித்துள்ளனர்.

காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், சமூக ஆர்வலர்களை திரட்டி மிகப்பெரியளவில் போராட்டம் வெடிக்கும் என பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.
கல்லூரி முதலாளியின் சட்டவிரோத ஆட்டத்திற்கு அதிகாரிகள் கடிவாளம் போடுவார்களா? அல்லது மக்களின் போராட்டம் தீவிரமடைய போகிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved