Also Watch
Read this
திண்டுக்கல் மாவட்டம், சமத்துவபுரம் அருகே பால் வேன் மோதி சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் துடிதுடிக்க உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்துள்ளது. எதிர்கால கனவுகளுடன் வாழ்ந்து வந்த குழந்தைகளின் மூச்சு ஒரு நொடியில் நின்ற சோகச் சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

பாட்டியுடன் சென்றவர்கள்...
பல்வேறு கனவுகளையும், வண்ணமயமான எதிர்காலத்தையும் மனதில் சுமந்தபடி சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த மழலைகள் ஒரு கணத்தில் நிகழ்ந்த கொடூர விபத்தால், அவர்களின் கனவுகளையும் நான்கு குடும்பங்களின் எதிர்கால நம்பிக்கைகளையும் சிதைத்துவிட்டது. சிரிப்பும் விளையாட்டுமாய் இருந்த அந்தப் பொழுது, ஒட்டுமொத்த கிராமத்தை சோகம் என்ற இருளில் மூழ்கடித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொல்லப்பட்டி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ், ஜெகதீசன், சின்னத்தம்பி ஆகியார் சகோதரர்கள். இவர்களின் குழந்தைகளான 11 வயதான யோகவர்ஷினி, 6 வயதான அனன்யா, 5 வயதான தனுஸ்ரீ, 6 வயதான மோசிகரன் ஆகியோர் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பாட்டி அஞ்சம்மாள் ஆடு மேய்க்க சென்ற போது குழந்தைகளையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார்.

’சாலையோரம் விளையாட வேண்டாம்’
பாட்டி ஒரு புறம் ஆடு மேய்த்துவிட்டு அங்கு அமர்ந்திருக்க, குழந்தைகள் சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்தது. ’சாலையோரம் விளையாட வேண்டாம்,’ என பாட்டி பலமுறை அறிவுறுத்தியும், அந்த குழந்தைகள் விளையாட்டுப் போக்கில் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் விளையாட்டில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது தான் மனதே நொறுங்கும் அளவுக்கு ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் வேகமாக வந்த பால் வேன், அந்த குழந்தைகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுள்ளது.

நான்கு குழந்தைகளும்...
வேன் மோதிய விபத்தில், குழந்தைகள் 4 பேரும் தூக்கி வீசப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, இதனை கண்ட மூதாட்டி அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அந்த நேரத்தில் அவ்வழியாக சென்றவர்கள் 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்த 4 குழந்தைகளும் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், விபத்தை ஏற்படுத்திய பால் வேன் ஓட்டுநர் தேட ஆரம்பித்தனர்.

வேன் ஓட்டுநர் கைது
விபத்து நிகழ்ந்த சிலஅடி தூரத்தில் வேன் ஒன்று நின்றுள்ளது. இதனை கண்ட போலீசார் அந்த வேனை பறிமுதல் செய்து, அங்கிருந்த 2 மலைகளில் ஓட்டுநர் பதுங்கியிருப்பானா? என சந்தேகித்து அந்த மலையை சுற்றி வளைத்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் நடந்த தேடுதல் வேட்டையில் மலையில் ஒளிந்து கொண்டிருந்த குருந்தம்பட்டியைச் சேர்ந்த ஓட்டுநர் சரவணனை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இறந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் நிதி வழங்கி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டார்.

விழிப்புணர்வு அவசியம்
குழந்தைகளின் சிரிப்பும் கனவுகளும் பாதுகாப்பான சூழலில் மலர வேண்டியது நம் அனைவரின் பொறுப்பு. சாலையோரம் விளையாடும் பிஞ்சுகளின் பாதுகாப்பில் பெற்றோரும், வாகன ஓட்டிகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒரு கணத்தின் அலட்சியம், ஒரு குடும்பத்தின் வாழ்நாள் கண்ணீராக மாறிவிடாதபடி, வேகத்தைவிட மனித உயிர்களுக்கு முன்னுரிமை கொடுப்போம் என அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved