Also Watch
Read this
சென்னை, கத்திப்பாரா Urban Squareல் அனுமதிக்கப்பட்ட வணிகப் பார்க்கிங் பகுதிகளைத் தாண்டி, பொதுமக்கள் சாதாரணமாக வந்து செல்லும் பொது இடங்களையும், சாலையோரங்களையும் ஆக்கிரமித்து டோக்கன் வழங்கி சட்டவிரோதமாகக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. முறையற்று நிறுத்தப்படும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறும் பொதுமக்கள், 50 மீட்டரில் செல்ல வேண்டிய இணைப்பு சாலைக்கு 5 கிலோ மீட்டர் சுற்றி செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

பார்க்கிங் கட்டண வசூல்
சென்னை மாநகரின் முக்கியப் போக்குவரத்து சந்திப்புகளில் ஒன்றான கத்திபாரா மேம்பாலத்தின் கீழ் அமைந்துள்ள Urban Square, பொதுமக்கள் கூடும் ஒரு முக்கிய பொழுதுபோக்கு மற்றும் போக்குவரத்து மையமாகும். ஆனால், சமீபகாலமாக இந்த சதுக்கத்தைச் சுற்றியுள்ள சாலையோரப் பகுதிகளிலும், பொதுமக்கள் தடையின்றி பயன்படுத்த வேண்டிய பொது இடங்களிலும் சட்டவிரோதமாக வாகனங்களை நிறுத்தி வைத்து கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஐந்து கி.மீ. சுற்றி...
எப்போதும் வாகன நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் கத்திபாரா சந்திப்பின் சாலையோரப் பகுதிகளை ஆக்கிரமித்து கட்டண பார்க்கிங் செயல்படுவதால், சாலைகளின் அகலம் குறைந்து கிண்டி - கத்திப்பாரா ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, Peak Hoursல் பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் அவசரச் சிகிச்சைக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட நீண்ட நேரம் நெரிசலில் சிக்கித் தவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. 50 மீட்டர் செல்ல வேண்டிய சாலைக்கு 5 கிலோ மீட்டர் சுற்றி செல்வதாக வாகன ஓட்டிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பொது மக்களிடம் அதிருப்தி
மேலும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் தொகை வசூலிப்பதாகவும், அதற்கு அச்சிடப்பட்ட ரசீது வழங்காமல், கையால் எழுதிய டோக்கன் வழங்கி பணம் பறிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து கேள்வி எழுப்பும் பொதுமக்களிடம், பார்க்கிங் மையங்களை நடத்தும் ஊழியர்கள் முறையற்ற வகையில் வாக்குவாதத்தில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. காவல்துறையினர் பெயரை கூறி பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து காவல்துறையினரிடம் பலமுறை புகார் அளித்தும், இதுவரை எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வாகன பாதுகாப்பு இல்லை
பொது மக்களிடம் இருந்து பார்க்கிங் கட்டணம் என்ற பெயரில் கணிசமான தொகை வசூலிக்கப்பட்டாலும், அங்கு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு எவ்வித பாதுகாப்பும் வழங்கப்படுவதில்லை. வாகனங்களுக்குச் சேதம் ஏற்பட்டாலோ அல்லது வாகனத்தில் உள்ள பொருட்கள் காணாமல் போனாலோ, அதற்கு யார் பொறுப்பு? என்பது குறித்த தெளிவான அறிவிப்புகளோ, தகவல்களோ பொது மக்களுக்கு வழங்கப்படுவதில்லை. கட்டணம் வசூலிப்பதில் காட்டும் தீவிரத்தை வாகனங்களின் பாதுகாப்பில் காட்டுவதில்லை.

ஆய்வு செய்ய வேண்டும்
கத்திப்பாரா அர்பன் ஸ்கொயர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் செயல்படும் பார்க்கிங் மையங்களுக்கு முறையான அனுமதி, குத்தகை ஆவணங்கள், கட்டண நிர்ணயம் மற்றும் ரசீது வழங்கும் நடைமுறை உள்ளதா? என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved