Also Watch
Read this
By: Manigandan Raja

மேகக்கூட்டம் போல பனிப்புகை மேலேறும் ரம்மியமான காட்சி :
பத்ரிநாத் அருகே ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான பனிச்சரிவு குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கஞ்சன்கங்கா நாலா பகுதியில் இந்த பனிச்சரிவின்போது, பெரிய பனிப்பாறை ஒன்றின் ஒரு பகுதி உடைந்து பள்ளத்தாக்கில் விழுந்தது. அப்போது, மேகக்கூட்டம் போல பனிப்புகை மேலேறும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
ஹிமாச்சலுக்கு படையெடுப்பதால் போக்குவரத்து நெரிசல் :
நாடு முழுவதும் தீவிரமான வெப்ப அலை வீசி வருவதால், வடமாநிலங்களை சேர்ந்த மக்கள் வெப்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக ஹிமாச்சல பிரதேசத்திற்கு படையெடுத்து வருகின்றனர். சிம்லா, மணாலி, தரம்சாலா உள்ளிட்ட மலைவாசஸ்தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவதால், மாண்டி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பால் 16 பேர் உயிரிழப்பு :

தெலங்கானா மாநிலத்தில் Heat Stroke -ஆல் பாதிக்கப்பட்டு பலியானோரின் 16 குடும்பத்திற்கு தலா 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். வரலாறு காணாத கோடை வெப்பம் காரணமாக வாரங்கால், கரீம் நகர், நிசாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
அசாம் மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 5 பேர் உயிரிழப்பு :

அசாம் மாநிலத்தை புரட்டிப்போட்ட புயலில் மின்னல் தாக்கி 5 பேர் பலியாகினர். மேலும், ஏராளமான வீடுகளும், உட்கட்டமைப்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டதோடு, 31 கிராமங்கள் புயலால் கடுமையாக சேதமடைந்துள்ளன.
புயலில் 6 விலங்குகள் உயிரிழந்த நிலையில், மின்னல் தாக்குதல்களில் கோக்ராஜர், பார்பேட்டா, கோலாகட் மற்றும் திப்ரூகார் மாவட்டங்களில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
முக்கிய ரவுடிகளை தேடி தேடி பிடிக்கும் காவல்துறை :

மேற்குவங்கத்தில் முக்கிய ரவுடிகளை தேடி தேடி பிடிக்கும் போலீசார், அவர்களை அரைகுறை ஆடையுடன் சாலையில் நடக்க வைத்து காவல் நிலையம் அழைத்துச் செல்வது பேசு பொருளாக மாறியுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டு பந்தாவாக வாழ்ந்த இடங்களில் இது போன்று அவர்களை அழைத்துச் செல்வதன் மூலம் மக்களுக்கு போலீஸ் மீது நம்பிக்கை ஏற்படும் என காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved