Also Watch
Read this
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் 67 ஆயிரத்து 452 கோடி ரூபாய் மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. எந்தெந்த நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன என்றும் அவற்றின் மூலம் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் பயன்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.

வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு
சென்னை, கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில், 15க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்ற வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்பை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

1,06,998 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 67 ஆயிரத்து 452 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டில், ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 998 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டன. இதில் 55 புதிய திட்டங்கள், 50 திட்டங்கள் ஏற்கனவே செயல்பட்டுவரும் நிறுவனங்களின் விரிவாக்க திட்டங்களாகும்.

தூத்துக்குடியில் ரூ.250 கோடி முதலீடு
இந்தியாவின் முதல் தனியார் சுற்றுப்பாதை ஏவுகலன் தயாரிப்பு நிறுவனமான ஸ்கைரூட் ஏரோபேஸ் நிறுவனம், தூத்துக்குடியில் ஏவுகலன்களின் உற்பத்தி, சேமிப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் சோதனை வசதிகளை அமைக்க 250 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்பந்தம் போட்டுள்ளது. இதன் மூலம் 500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது.

அக்னிகுல் காஸ்மோஸ் ரூ.400 கோடி முதலீடு
அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் தூத்துக்குடியில் 400 கோடி ரூபாய் முதலீட்டில் மீண்டும் பயன்படுத்தக் கூடிய திரவ உந்துவிசை ஏவுகலன்களின் ஒருங்கிணைப்பு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் ஆயிரத்து 500 பேர் வேலை வாய்ப்பை பெற உள்ளனர்.

4,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
கிருஷ்ணகிரியில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான உற்பத்தி ஆலையை அமைக்க அல்ட்ராவயலட் நிறுவனம் ஒப்பந்தம் போட்டுள்ளது. 779 கோடி ரூபாய் முதலீட்டில் அமையவுள்ள தொழிற்சாலை மூலம் நாலாயிரம் நபர்கள் வேலை வாய்ப்புகளை பெற உள்ளனர்.

சென்னையில் ரூ.477 கோடி முதலீடு
அமெரிக்காவை சேர்ந்த சூப்பர் மைக்ரோ நிறுவனம், சர்வர்கள் உற்பத்தி மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை சென்னையில் அமைக்க உள்ளது. 477 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் மையத்தில் 150 நபர்கள் வேலை வாய்ப்பை பெற உள்ளனர்.

ரூ.1,651 கோடி முதலீடு
ஜப்பான் நிறுவனமான ஒய்கேகே, ஜிப்பர்கள் மற்றும் இணைப்பு சாதனங்கள் உற்பத்தி செய்யும் ஆலையை திருவள்ளூரில் அமைக்க உள்ளது. ஆயிரத்து 651 கோடி ரூபாய் முதலீட்டில் இந்நிறுவனம் அமைக்கும் தொழிற்சாலை மூலம் 4 ஆயிரத்து 316 பேர் வேலை வாய்ப்பை பெறுவர்.

மின்னணு சாதனங்களின் உதிரிபாகங்கள் உற்பத்தி ஆலை
ஷைலி இன்ஜினீயரிங் ப்ளாஸ்டிக்ஸ் நிறுவனம் 400 நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நுகர்வோர் மின்னணு சாதனங்களுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழகத்தில் தொடங்க உள்ளது. குஜராத்திற்கு வெளியே இந்நிறுவனம் முதல் முதலீடு இது என்பது குறிப்பிடத்தக்கது.

திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில்...
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்கட்டமைப்பு, சுற்றுலா, சுகாதாரம், சுரங்க உபகரண உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆவிட் குழுமம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. முதற்கட்டமாக 7 ஆயிரம் கோடி ரூபாயை திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் முதலீடு செய்யும் இந்நிறுவனம், நேரடி மற்றும் மறைமுகமாக 12 ஆயிரம் நபர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க உள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக முதலீடு
உலகின் முன்னணி HVAC கம்ப்ரசர் உற்பத்தியாளரான ஜெர்மனியின் பிட்சர்(BITZER) நிறுவனம், இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனது உற்பத்தி ஆலையை 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உற்பத்தி ஆலை
ஜேகே டயர் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 143 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டயர் உற்பத்தி தொழிற்சாலையை தொடர்வதற்காக போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் 3 ஆயிரத்து 510 நபர்கள் வேலை வாய்ப்பு பெற உள்ளனர்.

ரூ.4,000 கோடி முதலீடு
ஜெர்மனியை சேர்ந்த டைம்லர் (DAIMLER)நிறுவனம், காஞ்சிபுரத்தில் உள்ள சிப்காட் ஒரகடம் தொழிற்பூங்காவில் அமைந்துள்ள தனது உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மையத்தை வணிக வாகனங்களுக்கான வடிவமைப்பு, ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக மேம்படுத்த உள்ளது. இதற்காக நாலாயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இந்நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல் முறையாக...
திருவள்ளூர், காஞ்சிபுரம், திண்டுக்கல், கடலூர், சென்னை, தூத்துக்குடி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, தென்காசி, திருநெல்வேலி, இராணிப்பேட்டை, வேலூர், கோயம்புத்தூர், ராமநாதபுரம், ஈரோடு, கரூர், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பூர், புதுக்கோட்டை, திருச்சி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் இந்த ஒப்பந்தங்கள் பரவலாக மேற்கொள்ளப்பட உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், முதன்முதலாக தொழில் திட்டம் தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிறுவன ரீதியாக...
வர்த்தகம், இருதரப்பு முதலீடுகள், இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள், செமிகண்டக்டர் துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகிய துறைகளில், கஜகஸ்தான், நியூசிலாந்து, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுடன் நிறுவன ரீதியாக 7 ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved