Also Watch
Read this
கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறப்பு கட்டுமான திறன் பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட 15 அறிவிப்புகள் சட்டசபையில் வெளியிடப்பட்டது.

மாநில,மாவட்ட அளவில் பல்வேறு கட்டுமானத் தொழிற்பிரிவுகளில் போட்டிகள் நடத்தி வெற்றியாளர்களுக்கு முதலமைச்சரின் வெற்றி விருதுகள் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு ஆலை லைசென்ஸ் ஆன்லைன் திட்டம்
பட்டாசு ஆலைகளுக்கு உரிமம் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க ஆன்லைன் லைசென்ஸ் திட்டம் கொண்டு வரப்படும் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சட்டப்பேரவையில் தெரிவித்தார். உரிமம் பெற 3 ஆண்டுகளும், புதுப்பிக்க ஓராண்டும் ஆவதால் விதிமீறல்கள் ஏற்படுவதாக அவர் கூறினார். மேலும், கடந்த ஆட்சியில் உரிமம் வழங்க 5 லட்சம் வரை லஞ்சம் பெறப்பட்டதாக அமைச்சர் கூறியதால், திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

திருச்சி, சேலம், தஞ்சை கதரங்காடிகள் ரூ.1 கோடியில் நவீனமயம்
திருச்சி, சேலம், தஞ்சாவூரில் உள்ள கதரங்காடிகள் ஒரு கோடி ரூபாயில் நவீன மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறையின் சார்பில் சட்டப்பேரவையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நூற்பாளர்கள், நெசவாளர்களுக்கான நலநிதி பங்களிப்பு 12ல் இருந்து 16 சதவீதமாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத் தலைவர் நியமன மசோதா
நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்திற்கு நிரந்தர தலைவர், செயலர் மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்யும் வகையிலான சட்ட மசோதாவை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் தாக்கல் செய்தார். நகர்ப்புற மேம்பாட்டு குழுமங்களின் நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தந்த மாவட்டங்களின் ஆட்சியர் ஆணையத்தின் உறுப்பினராக தொடர்ந்து செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved