Also Watch
Read this
Posted on: Mar 27, 2026 11:24 AM
திமுக கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளை அடையாளம் காண்பது குறித்து அறிவாலயத்தில் இரண்டரை மணிநேரம் ஆலோசனை நடைபெற்றது. 23 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், கடந்த முறை போட்டியிட்ட 16 தொகுதிகளை மீண்டும் பெற்று இருப்பதாகவும் செல்வப்பெருந்தகை தகவல் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை சுமூகம்
இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது;
திமுக உடன் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில் 23 தொகுதிகளை அடையாளம் கண்டு உள்ளோம். ஐந்து தொகுதிகள் குறித்து மீண்டும் பேசி முடிவு எடுப்போம். தென்காசி, விருத்தாச்சலம் தவிர 16 தொகுதிகளை மீண்டும் நாங்கள் திரும்ப பெற்று உள்ளோம்.

விரைவில் வேட்பாளர்கள் அறிவிப்பு
ஈரோடு கிழக்கு ஏற்கனவே நாங்கள் நின்ற தொகுதி, அதனால் அதை நாங்கள் திரும்ப பெற்று உள்ளோம். கன்னியாகுமரியில் நாங்கள் மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறோம். அதில் ஒன்றை கேட்கிறார்கள். இது குறித்து அகில இந்திய தலைமையிடம் பேசி உள்ளார்கள். அது எங்களுடைய சிட்டிங் தொகுதி என்பதால் அதைக் கொடுப்பது கடினம்.

ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் எங்கள் வேட்பாளருக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. அதனால் அது குறித்து முதல்வரிடம் பேசி பிரச்சினையை தீர்ப்போம். வேட்பாளர் அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved