Also Watch
Read this
லாக் டவுன் போன்ற சூழலுக்கு வாய்ப்பு இல்லை என்று, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி திட்டவட்டமாக கூறி உள்ளார். மேற்காசிய போர் சூழலால் லாக் டவுனுக்கு வாய்ப்பு என சமூக வலைத்தளங்களில் கூறப்படுவதற்கு மறுப்பும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை
ஈரான் போர் காரணமாக, எரிபொருள்களுக்கான பற்றாக்குறை அதிகரித்து, கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்டது போன்ற, ஒரு பொது முடக்கம் மீண்டும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக, சமூக ஊடகங்களில் தகவல் பரவும் நிலையில், மத்திய அரசு அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மத்திய அமைச்சர் விளக்கம்
இதுதொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது;
உலகளாவிய நிலைமை தொடர்ந்து நிலையற்றதாகவே உள்ளது. எனவே, எரிசக்தி, விநியோகச் சங்கிலிகள், அத்தியாவசியப் பொருள் தொடர்பான கள நிலவரங்களை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான நமது அரசு, பொது மக்களுக்கு எரிபொருள், எரிசக்தி, பிற அத்தியாவசிய பொருள்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. சவால்களை சமாளிக்க நாங்கள் முழு அளவில் தயாராக உள்ளோம்.

அமைதி, பொறுப்பு, ஒற்றுமை
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதில் இந்தியா தனது திறனை தொடர்ந்து வெளிப்படுத்தி உள்ளது. மேலும், நாங்கள் சரியான நேரத்தில், திட்டமிட்ட முறையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம். இந்தியாவில் பொது முடக்கம் குறித்த வதந்திகள் முற்றிலும் பொய்யானவை. இதை நான் தெளிவாகக் கூறுகிறேன். இந்திய அரசாங்கத்திடம் அத்தகைய எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை. இதுபோன்ற காலங்களில் நாம் அமைதி, பொறுப்பு, ஒற்றுமையுடனும் இருப்பது முக்கியம். வதந்திகளைப் பரப்பி பீதியை உருவாக்கும் முயற்சிகள் பொறுப்பற்றவை மற்றும் தீங்கு விளைவிப்பவை.
இவ்வாறு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பதிவிட்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved