Also Watch
Read this
எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில், தனித்துப் போட்டியிடுவதாக புதிய தமிழகம் கட்சி அறிவித்து உள்ளது. கூட்டணிக்கு யாரும் சேர்த்துக் கொள்ளாததால், 60 - 70 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட முடிவு எடுத்துள்ளது.

நிர்வாகிகள் ஆலோசனை
இதுகுறித்து, புதிய தமிழகம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை;
2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மார்ச் 21ஆம் தேதி மதுரையிலும், 25, 26 தேதிகளில் கோவையிலும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நேர்காணல் கூட்டம் நடைபெற்றது. கடந்த 30 ஆண்டுகள் தென் தமிழகத்தில் தொடர்ச்சியாக, அரசியல் களத்தில் நிலைத்து நின்று செயல்பட்டு வருகிறது புதிய தமிழகம் கட்சி. நமது வலிமைக்கு ஏற்ப எண்ணிக்கையும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் வழங்குவதில் காட்டப்பட்ட பாரபட்சம் குறித்து விவாதிக்கப்பட்டது.

‘உண்மையான அரசியல் வெற்றி’
ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பேராதரவுடன் இயங்கும் புதிய தமிழகம் கட்சிக்கு உரிய அரசியல் அங்கீகாரம் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ள சூழலில், இத்தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் தன்னிகரில்லாத் தலைவர் கிருஷ்ணசாமியின் கரத்தை வலுப்படுத்துவதும், நம் மக்கள் ஒன்றுபட்டு நிற்பதும், நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்பதும் மட்டுமே ‘உண்மையான அரசியல் வெற்றி’ என்பதை நிலைநாட்டும் பொருட்டு, புதிய தமிழகம் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

நம்மை புறக்கணித்தவர்களை, நாம் புறக்கணிப்போம்
கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வேட்பாளர் தேர்வு நேர்காணலில் கலந்துகொண்டனர். புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ள 120 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள 60 முதல் 70 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த தொகுதிகளில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை மார்ச் 29ஆம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட உள்ளார். ஒன்றுபட்டு நின்று, நம்மை புறக்கணித்தவர்களை, நாம் புறக்கணிப்போம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved