Also Watch
Read this
சென்னை பனையூரில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற த.வெ.க. கூட்டணிக் கட்சி ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக்கு "மதசார்பாற்ற சமூகநீதி வெற்றிக்கூட்டணி" என பெயர் அறிவிக்கப்பட்டது.

இந்தக் கூட்டணி தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரியிலும் களமாடுமென காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ள நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்தான குழப்பத்திற்கு முடிவு கட்டும் வகையில் கூட்டணிக்கு பெயர் வைத்து விட்டதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியுள்ளார்.

தவெக தலைமையில்...
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வென்ற தவெக, தனிப் பெரும்பான்மை பெறாததால், ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் இருந்த கட்சிகளின் தயவை நாடி அவர்களை தன் பக்கம் இழுத்துக் கொண்டது.

திமுக கூட்டணியில் இருந்து முதலில் காங்கிரஸ் வெளியேறிய நிலையில், அடுத்து விசிக, மதிமுக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளும் இணைந்து கொண்டன. சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு தெரிவிப்பதாக கூறிய நிலையில், தவெக சட்டமன்றத்தில் பெரும்பாண்மையை நிரூபித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்தது.

இரண்டாம் கட்ட ஆலோசனை
இதனைத் தொடர்ந்து கூட்டணியை வலுவாக்க, தவெக கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இந்தக் கூட்டத்தை சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகியவை புறக்கணித்த நிலையில், ஏனைய கட்சிகள் பங்கேற்றன. இந்நிலையில், கூட்டணியை மேலும் வலுவாக்கவும், அதிகாரப்பூர்வ பெயர் சூட்டவும் இரண்டாம் கட்ட ஆலோசனை கூட்டத்துக்கு தவெக ஏற்பாடு செய்திருந்தது.

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் ஒவ்வொரு கூட்டணி கட்சி அலுவலகங்களுக்கு சென்று அழைப்பு விடுத்த நிலையில், ’இந்த கூட்டத்திலும் பங்கேற்கப்போவதில்லை,’ என்றும் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாகவும் சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சி முன்கூட்டியே அறிவித்தது.

கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு
இதனையடுத்து, பனையூரில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்து கலந்து கொண்டார். காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி, தாரகை கத்பட் உள்ளிட்டோரும், விசிக சார்பில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், அமைச்சர் வன்னியரசு, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சிந்தனைச் செல்வனும், மதிமுக சார்பில் வைகோ, துரை வைகோவும், ஐ.யூ.எம்.எல் சார்பில் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொஹிதீன் அமைச்சர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அனைத்து தேர்தல்களிலும்...
சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் கூட்டணியின் பெயர், ’மதசார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி,’ என்றும் கூட்டணிக்கு தலைவராக முதலமைச்சர் விஜய் இருப்பார் என அறிவிக்கப்பட்டது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் தவெக கூட்டணி தொடரும் என்றும் இடைத்தேர்தல் மட்டுமல்லாமல் இனி வரும் அனைத்து தேர்தலையும் ஒன்றாக இணைந்து சந்திக்க முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

தவெக வேட்பாளர் வெற்றிக்காக...
இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களின் வெற்றிக்காக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் எனவும் இந்த கூட்டணி சமூக நீதி அடிப்படையிலும், மதவாதத்திற்கு எதிராகவும் தமிழகத்தின் நலனுக்காகவும் உருவாக்கப்பட்டதாக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

பிளவு வராது...
பிரதமர் வேட்பாளர் யார்? என்பது குறித்து தவெக காங்கிரஸ் இடையே நிலவும் சர்ச்சை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, குழப்பத்திற்கு முடிவு கட்டும் வகையில் கூட்டணிக்கு பெயர் வைத்துவிட்டோம் என்றும் இந்த கூட்டணிக்குள் எப்போதும் பிளவு வராது எனக் உறுதியளித்தார்.

மகிழ்ச்சியுடன்...
ஆலோசனை கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்புக்கு பின் அங்கு தயார் செய்து வைக்கப்பட்டிருந்த முந்திரி பாதாம், 3 வகை பழச்சாறு, வெஜ் ரோல், கர்நாடக ஸ்பெசல் பட்டர் தோசை உள்ளிட்ட வகை வகையான உணவுகளை ரசித்து ருசித்து உண்ட தலைவர்கள் மகிழ்ச்சியாக கிளம்பிச் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved