Also Watch
Read this
"பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டம் கைவிடப்படும்," என்ற முதலமைச்சர் விஜயின் ஒற்றை அறிவிப்பால், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்களின் நீண்ட நெடும் போராட்டத்துக்கு தீர்வு எட்டப்பட்டிருக்கிறது. நான்காண்டு கால அச்சுறுத்தல் நீங்கிய மகிழ்ச்சியில் முதலமைச்சர் விஜய்க்கு உணர்ச்சி பெருக்குடன் நன்றி தெரிவித்த கிராம மக்கள், பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏகனாபுரம் கிராமத்தில்...
’பல தலைமுறைகளாக வாழ்ந்து வந்த சொந்த மண்ணை விட்டு எங்கும் போக மாட்டோம்,’ என நான்கு ஆண்டுகளாக உறுதியாக நின்ற ஏகனாபுரம் கிராம மக்களின், இதயத்தில் பால் வார்த்திருக்கிறது, முதலமைச்சர் விஜயின் அறிவிப்பு.
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்காக, கடந்த 2019ல், அதிமுக ஆட்சியின் போது, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. சென்னையில் இருந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையை ஒட்டி எளிதில் அணுகும் வகையில் இருந்ததால் பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது. 5,746 ஏக்கரில் விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர், ஏகனாபுரம், வளத்தூர், பொடவூர், நெல்வாய், தண்டலம், மடப்புரம், தொடூர், சிங்கிலிபாடி, குணகரம்பாக்கம், எடையார்பாக்கம், அக்கமாபுரம், மகாதேவிமங்கலம் ஆகிய 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அப்போதே போராட்டங்களில் ஈடுபட்டனர்.

1,100 நாட்களை கடந்த போராட்டம்
அதன் பின்னர், 2021ல் திமுக ஆட்சி அமைந்த பிறகும், பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கான பணிகள் முழு வீச்சில் முன்னெடுக்கப்பட்டன. நிலம் கையகப்படுத்தும் பணிகள் வருவாய்த்துறை மூலம் முடுக்கி விடப்பட்டது. இதனை கண்டித்து போராட்டத்தில் குதித்த அப்பகுதி மக்கள், ஆயிரத்து 100 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வந்தனர்.
தவெக ஆட்சியில்...
இந்த நிலையில் தான் கட்சி ஆரம்பித்த உடனேயே பரந்தூர் விமான நிலைய விவகாரத்தை கையிலெடுத்தார் விஜய். கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிலேயே, ’பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும்,’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி தனது முதல் மக்கள் சந்திப்பையும் ஏகனாபுரத்திலேயே நடத்தினார்.

துணை நிற்பேன்...
அதுவரை வீட்டிற்குள் இருந்து அரசியல் செய்வதாக விமர்சிக்கப்பட்டு வந்த விஜய், ஏகனாபுரம் மக்களை சந்தித்ததன் மூலமே தனது கள அரசியலை ஆரம்பித்தார். ஏகனாபுரத்தில் பேசிய போது, ராகுல் என்ற குழந்தை பேசியது தனது மனதை ஏதோ செய்துவிட்டதாகவும், அதனாலேயே உங்களை சந்திக்க வந்ததாகவும் கூறிய விஜய், எப்போதும் உங்களுக்கு துணை நிற்பேன் என்று உறுதியளித்தார்.
இதனால், தவெக ஆட்சி அமைந்ததுமே தங்களது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர் ஏகனாபுரம் மக்கள். அதற்கு அச்சாரம் போடுவது போல் சுதந்திர தினத்தன்று ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அப்பகுதியில் உள்ள ஒரு சாலைக்கு முதலமைச்சர் விஜயின் பெயரை சூட்டுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

உணர்ச்சி பொங்க நன்றி
இந்நிலையில் தான் கொடுத்த வாக்கை காப்பாற்றி, பரந்தூர் மக்களின் துயர் துடைத்திருக்கிறார் விஜய். சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் விஜய், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டம் முழுமையாக கைவிடப்படுவதாக அறிவித்தார். ’முதலமைச்சர் விஜய் மீது தாங்கள் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை,‘ என ஆனந்த கண்ணீர் விட்ட ஏகனாபுரம் மக்கள், உணர்ச்சி பொங்க நன்றி தெரிவித்தனர்.

இன்னொரு சுதந்திர தினம்
தங்களது நீண்ட கால போராட்டத்துக்கு தீர்வு கிடைத்ததால், ஏகனாபுரம் கிராமமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியது. பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, முதலமைச்சர் விஜய்க்கு நன்றி தெரிவித்து முழக்கமிட்டனர். ’ஏகனாபுரம் கிராமத்துக்கு இனி ஆகஸ்ட் 24 இன்னொரு சுதந்திர தினம்,’ என தெரிவித்த அப்பகுதி மக்கள், தங்கள் கண்ணீரை துடைத்த முதலமைச்சர் விஜயை எப்போதும் மறக்க மாட்டோம் என தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved