Also Watch
Read this
பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாமல் திணறும் தவெகவுக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று, இபிஎஸ் உடனான அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு பிறகு கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.

எந்த சூழ்நிலையிலும் ஆதரவு இல்லை
இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது;
பல ஊடகங்களில் தவெகவுக்கு, அதிமுக ஆதரவளிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தி. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பின்னர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக வலுவாக செயல்பட்டு வருகிறது. எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என்பதை எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

இபிஎஸ் அவசர ஆலோசனை
சென்னை, பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இல்லத்தில், இன்று காலை முதலே அதிமுகவின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வந்த நிலையில், கே.பி.முனுசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். தவெகவுக்கு அதிமுக ஆதரவளிக்க உள்ளதாக இன்று காலை முதலே தகவல்பரவியது.

சி.வி.சண்முகம் தலைமையில்...
இதுகுறித்து முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் ஆகியோர் எம்எல்ஏக்களிடம் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் பரவியது. தவெகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்று, எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தியதாகவும், கூறப்பட்டது. ஆனால், இந்த ஊகத்திற்கு, தவெகவுக்கு ஆதரவு இல்லை எனக்கூறி, கே.பி.முனுசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved