Also Watch
Read this
சட்டமன்றத்தில் நிதித்துறை அமைச்சர் பிழையின்றி பேச வேண்டுமென எம்.எல்.ஏ. ராஜேந்திரன் பேசியதால் டென்ஷனான, மரிய வில்சன் கேலி பண்றீங்களா என கொந்தளித்தார். நிதித்துறை அமைச்சருக்கு ஆதரவாக தவெக அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் ஆதவ் அர்ஜுனா கொடுத்த பதிலடி வாதம், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் நகைப்பூட்டும் பேச்சு மற்றும் சபாநாயகர் சமாதானம் உள்ளிட்டவை அவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

டியூசன் செல்ல வேண்டும்...
தமிழக சட்டமன்றத்தில் நடந்த நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்தின் இரண்டாம் நாளில், எம்.எல்.ஏ. ராஜேந்திரன் நிதிநிலை அறிக்கையை வாசித்த அமைச்சர் மரிய வில்சன் உதிர்த்த ஆங்கில வார்த்தைகள் நேர்த்தியாக இருந்தது ஆனால், தமிழ் சொற்றொடர்கள் பிழையாக இருந்தாக சுட்டிக்காட்டினார். அதோடு மட்டுமில்லாமல் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தனது வாதத்தால் சட்டமன்றத்துக்கு பலம் சேர்ப்பதாகவும், நிதியமைச்சர் மரிய வில்சன் சரியாக வாசிக்க அவரிடம் டியூசன் செல்ல வேண்டும் என கூறியது தவெகவினரை எரிச்சலூட்டியது.

பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்
அப்போது பேசிய பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர், நிதித்துறை அமைச்சர் சரியாக தமிழில் பேச வேண்டுமென கூறிய உறுப்பினரே தனது உரையில் 8 முறை ஆங்கில வார்த்தையான பட்ஜெட்டை பயன்படுத்தியிருப்பதாக நகைப்பூட்டும் வகையில் கூறினார்.

அதற்கு எழுந்து பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், எதிர்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் சங்கத்தமிழிலா பேசுகிறார்? என கிண்டலடித்ததோடு, அவருக்கு தமிழ் பாடம் எடுப்பதற்கு பதில், நேர்மையான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வது எப்படி? என பேரவை உறுப்பினர்கள் மரியம் வில்சனிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என தடாலடியாக பேசினார்.

உருவ கேலி என கொந்தளிப்பு
இதனையடுத்து, நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பேசுகையில், உருவ கேலி, பெண்கள் தொடர்பாக ஜாதி ரீதியாக பேசியதை தொடர்ந்து தற்போது மொழி ரீதியில் வந்துவிட்டதாக கடும் டென்ஷனாகினார். அமைச்சர்கள் செய்த சாதனையையெல்லாம் பற்றி பேசாமல் தன்னுடைய மொழி உச்சரிப்பு பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பிய அவர், ‘இப்படி தான் பேசுவேன், உங்களுக்காக மாற்றி கொள்ள வேண்டிய அவசியமில்லை,’ எனக் கூறி சடாலென்று மைக்கை திருப்பிவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார்.

கலகலப்பாக்கிய எ.வ.வேலு
அவையில் விவாதம் சூடு பறக்கவே, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டாம், அவர் நகைச்சுவையாக பேசியிருக்கிறார் என கூறி சமாதானம் செய்தார்.

கடும் விவாதங்கள் நடந்த இந்த சட்டமன்றத்தில் அமைச்சர் மரிய வில்சன் பர்சனலாக எடுத்துக் கொண்டு பேசுவதாகவும், அவ்வாறு நடந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லையென்றும் திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார். தமிழே உயிர் என கர்ஜித்தவாறு தொடங்கிய இந்த சட்டமன்றத்தில் இறுதி விவாதம் தமிழ் உச்சரிப்பு பிரச்சனையில் முடிந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved