Also Watch
Read this
ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலுக்கு மத்தியில், அவசர அவசரமாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்? என்று, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

தென்னக மக்களின் நியாயமான கேள்வி
இதுதொடர்பாக, திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், தமது பதிவில் கூறி இருப்பதாவது;
தென்னக மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தே தீர வேண்டும். தொகுதி மறுவரையறையை எப்படி நடத்தப் போகிறார்கள்? என்று வெளிப்படையாக அறிவிக்காமல், ஒன்றிய பாஜக அரசு இதுவரை ரகசியம் காப்பது ஏன்? 2001ல், முன்னாள் பிரதமர் வாஜ்பாய், அடுத்த 25 ஆண்டுக்கு தொகுதி மறுவரையறையை ஒத்தி வைத்ததைப் போல, பிரதமர் மோடியும் செய்ய வேண்டும் என்று, தென் மாநிலங்கள் முன் வைத்த நியாயமான கோரிக்கைக்கு பிரதமரின் பதில் என்ன?

சர்வாதிகாரமன்றி வேறென்ன?
ஐந்து மாநில தேர்தல்களுக்கு இடையே அவசர அவசரமாக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரைக் கூட்டுவதற்கு என்ன அவசியம்? நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை ஏப்ரல் 29ஆம் தேதிக்குப் பிறகு கூட்ட வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர்களின் நியாயமான கருத்தை உதாசீனப்படுத்துவதில் மறைந்துள்ள மர்மம் என்ன? அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி, கலந்தாலோசிக்காமல் மிக முக்கியமான அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளும் முயற்சி, சர்வாதிகாரமன்றி வேறென்ன?

உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்
எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் கேட்கும் கேள்விகளுக்கு தான் பதில் சொல்வதில்லை. மக்களின் கேள்விகளுக்கேனும் பதில் கிடைக்குமா? தென் மாநிலங்களின் உரிமைக்கு உலை வைத்து, வடக்குக்கு வலிமையை வாரி வழங்கும் ஒன்றிய பாஜக அரசின் செயல்களை திமுக பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது.

இது, இங்கு வாழும் மக்களின் எதிர்காலம், எங்கள் அனுமதியின்றி, எங்களோடு பேசாமல் இது தொடர்பாக எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் அதற்கு உயிரே போனாலும் உடன்பட மாட்டோம்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் தமது பதிவில் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved