Also Watch
Read this
ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டியின் மகனுக்கு சொந்தமான கல்குவாரியில் ஆண் சடலம் மீட்கப்பட்ட விவகாரம், இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? அதன் பின்னணியில் வேறு சதித் திட்டங்கள் உள்ளனவா? என்பது குறித்து, விசாரணை நடத்த அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

மர்மம் நிறைந்த கல்குவாரி
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
திண்டுக்கல் மாவட்டம், சரளைப்பட்டியில் உள்ள கல்குவாரி ஒன்றில், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியில் பல மர்மங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சரளைப்பட்டி கல்குவாரியை திருவரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவரது மகன் விஜயபாரதி பெயரில் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞரை கடந்த 10 நாள்களாக காணவில்லை. கருப்பசாமி காணாமல் போன சில நாள்களிலேயே சந்தேகத்தின் அடிப்படையில், கல்குவாரிக்கு சென்று விசாரித்த போது, அங்கு அவர் வரவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது அவரது உடல் அங்கிருந்து, அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தி உள்ளது.

எம்எல்ஏ சாகசங்கள்
திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் சாகசங்கள் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அறிந்தவை தான். கரூர் பகுதியில் அவருக்கு சொந்தமான குவாரியில் நடக்கும் முறைகேடு குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் குழுவை, கடத்திச் சென்று தாக்கியதும், அந்த வழக்கில் அவர் கைது செய்யப்படாமல் இன்று வரை சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருப்பதையும் நாடே அறியும்.

எனவே, சரளைப்பட்டி கல்குவாரியில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டாரா? அதன் பின்னணியில் வேறு சதித் திட்டங்கள் உள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved