Also Watch
Read this
சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் விஜய் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி, திமுகவினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்ட மேடைகளில், அரசியல் நாகரிகத்தை காற்றில் பறக்கவிட்டு வரம்பு மீறி பேசிய பேச்சுகள், அவர்களுக்கே Backfire-ஆகி, ஆ.ராசா, சேகர்பாபு உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது அடுத்தடுத்து FIR பாயும் எதிர்வினையாக உருவெடுத்துள்ளது.

வழக்கமான அரசியல் நகர்வா?
தமிழ்நாடு அரசியல் களத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், எதிர்க்கட்சியினர் மீது வழக்குப்பதிவு செய்வதும், அதற்கு எதிராக எதிர்க்கட்சியினர் வீதிக்கு வந்து போராடுவதும் காலம் காலமாக பார்த்து வரும் ஒன்றுதான். ஆனால், தற்போதைய சூழலில் சென்னை, கள்ளக்குறிச்சி, கடலூர் என திமுக முக்கிய புள்ளிகள் மீது அடுத்தடுத்து பாயும் FIR, வழக்கமான அரசியல் நகர்வா? அல்லது அதிரடிக்கு முன்பான பிள்ளையார் சுழியா? என்ற கேள்வியை எழ வைத்திருக்கிறது.

திமுக தலைவர்களுக்கே Backfire
சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து, தவெக தலைவரும், முதல்வருமான விஜய்யின் பேச்சு, அறிவாலய வட்டாரத்தை கடும் கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. அதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி, தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டங்கள், தற்போது திமுக தலைவர்களுக்கே Backfire-ஆகி அதிர வைத்து கொண்டிருக்கிறது.

ஆ.ராசா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
சென்னை சைதாப்பேட்டையில் கடந்த 12ம் தேதி, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், அமைச்சர் நிர்மல் குமார் குறித்து பொதுவெளியில் இழிவாக பேசியதாகவும், முதலமைச்சரை ஏகவசனத்தில் விமர்சித்ததாகவும் எழுந்த புகாரில், சைதாப்பேட்டை காவல்துறையினர் ஆ.ராசா மீது அதிரடியாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் சிற்றரசு ஆகியோர் மீது வழக்கு பதிவான நிலையில், இந்த புதிய FIR திமுக வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

துறைமுகம் எம்.எல்.ஏ. சேகர்பாபு மீது...
இதேபோல், சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் குறித்து நாகரிகமற்ற வார்த்தைகளால் அர்ச்சித்ததாக துறைமுகம் எம்.எல்.ஏ. சேகர்பாபு மீது தவெக உறுப்பினர் ஜெகதீஸ்வரி அளித்த புகாரில் பி1 காவல் நிலையத்தில் வழக்கு பாய்ந்துள்ளது.

வசந்தம் கார்த்திகேயன் மீது...
மறுபுறம், கள்ளக்குறிச்சியில் முதலமைச்சரை அருவருக்கத்தக்க வகையில் விமர்சித்ததாக, ரிஷிவந்தியம் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது தவெக நிர்வாகிகள் எஸ்பி அலுவலகத்தில் புகாரளித்தனர். அதனடிப்படையில் ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன்...
போராட்டம் நடந்த இடங்களில் மட்டுமல்லாமல், கடலூர் மாவட்டத்திலும் தமிழக வெற்றிக் கழகத்தினர் ஸ்கெட்ச் போட்டுள்ளனர். திருப்பாதிரிப்புலியூர், கடலூர் முதுநகர்,தேவனாம்பட்டினம் ஆகிய 3 வெவ்வேறு காவல் நிலையங்களில், ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் ஆகிய 3 பேர் மீதும் தனித்தனியாக தவெக நிர்வாகிகள் புகார்களை தட்ட, அங்கேயும் FIR பதிவு செய்யப்பட்டு நிலைமையை மேலும் சூடேற்றியுள்ளது.

ஆளும்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும்
இந்த வழக்குகளை பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார். திமுக ஆட்சியின்போது அன்றைய முதலமைச்சரை முட்டாள் முதலமைச்சர் என அவதூறாக பேசியவர்கள் தான், ஆட்சிக்கு வந்ததும் வழக்குப்பதிவு செய்வதாக அவர் சாடினார்.

ஒருபக்கம் மேடை பேச்சாளர்களின் எல்லை மீறிய பேச்சுக்கள், மறுபக்கம் தவெக அரசின் லீகல் ஆக்சன் என ஆளும்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் இடையிலான இந்த அரசியல் மோதல், வரும் நாட்களில் எந்த மாதிரியான திருப்பங்களை ஏற்படுத்தப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved