Also Watch
Read this
நடிகர் விக்ரம் அரிய வகை லார் கிப்பான் குரங்குடன் வீடியோ வெளியிட்டது சர்ச்சையான நிலையில், அதன் உரிமையாளருக்கான ஆவணங்களை சமர்ப்பிக்கக் கோரி, வனத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மூன்று நாட்களுக்குள்...
தென்கிழக்கு ஆசிய வகை குரங்குகளை வீட்டில் வளர்க்க தடை உள்ளதால், அது எங்கு வாங்கப்பட்டது? என்ற ஆவணங்களைக் கேட்டு, படப்பிடிப்பு தளத்திலேயே விக்ரமிடம் அதிகாரிகள் நோட்டீஸை வழங்கினர். 3 நாட்களுக்குள் உரிய சான்றுகளுடன் நேரில் விளக்கமளிக்க தவறினால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளது. அதோடு, விக்ரமுக்கு குரங்கை வழங்கிய ஈரோட்டை சேர்ந்த கேசவநாதன் என்பவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

என்ன நடந்தது?
சமீபத்தில், நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை தட்டிவிட்டார். அதில், கையில் ஒரு குட்டிக் குரங்கை வைத்துக்கொண்டு அவர் செல்லமாக கொஞ்சும் காட்சி, இணையத்தை சுழன்றடித்தன. ’அட, விக்ரம் சார் வீட்டில் புது செல்ல பிராணியா?’ என ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளித் தெளிக்க, வனத்துறையின் பார்வையோ வேறு பக்கம் திரும்பியது. அந்த வீடியோவில் இருந்தது சாதாரண ஊர் குரங்கு அல்ல, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் அடர்ந்த காடுகளில் மட்டுமே வாழும் ’லார் கிப்பன்’ எனப்படும் அரிய வகை குரங்கு இனம்.

மகளின் வீட்டில்...
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அக்கரையில், மறைந்த மு.க.முத்துவின் பேரனும் தொழிலதிபர் சி.கே.ரங்கநாதனின் மகனுமான மனு ரஞ்சித்தின் இல்லம் உள்ளது. இவருக்கு தான் நடிகர் விக்ரம், தனது மகள் அக்சிதாவை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். மகளை பார்க்க விக்ரம் அங்கு சென்றிருந்த நேரத்தில், சில எக்சாடிக் விலங்கு வியாபாரிகள் இந்த அரிய வகை லார் கிப்பன் குரங்கை விற்பனைக்காக கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.

சமூகவலைதளத்தில் கொந்தளிப்பு
ஆரம்பத்தில், விக்ரம் இதனை வாங்க திட்டமிட்டதாக தெரிகிறது. அந்த உற்சாகத்தில், குரங்கை கையில் பிடித்து விக்ரம் ஒரு வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக பதிவிட்டுள்ளார். ஆனால், குரங்கை வாங்கும் எண்ணத்தை கைவிட்டு, பின்னர் வந்தவர்களிடமே அதனை திருப்பி அனுப்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீடியோ வைரலான சில மணி நேரங்களிலேயே, வன உயிரின ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கேள்விகளை எழுப்ப தொடங்கினர். சர்வதேச அளவில் பாதுகாக்கப்பட்ட சிபிசி பட்டியலில் உள்ள ஒரு உயிரினம், எப்படி ஒரு தனிநபர் கைக்கு வந்தது? என்பதே அவர்களின் கொந்தளிப்புக்கு காரணம்.

வனத்துறை விசாரணை
விஷயம் சீரியஸாவதை உணர்ந்த விக்ரம், அந்த வீடியோவை உடனே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார். ஆனால், வனத்துறை அதிகாரிகள் சும்மா இருப்பார்களா? உடனடி கள ஆய்வில் இறங்கினர். மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் Parivesh 2.0 இணையதளம் மூலம், இறக்குமதி செய்யப்பட்ட எக்சாடிக் உயிரினங்களுக்கு உரிய சான்றிதழ் பெறப்பட்டு தான் இந்த குரங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதாக வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும், அந்த ஆவணங்கள் அனைத்தும் உண்மையிலேயே செல்லுபடியாகக்கூடியவை தானா? அல்லது சர்வதேச விலங்கு கடத்தல் கும்பலின் பின்னணி ஏதேனும் உள்ளதா? என்ற கோணத்தில் வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில், விக்ரம் விளக்கம் தரக்கோரி, வனத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved