Also Watch
Read this
"சதுரங்க வேட்டை" திரைப்பட பாணியில் மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய கும்பலை பிடிக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முகவர்களின் வீடுகளை முற்றுகையிட்ட மக்கள், மோசடிக்காரரை அழைத்து சென்ற காவல்துறை வாகனம் மீது கல்வீசி தாக்கி வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றமான சூழல் நிலவியது.

முதலீடு மாயை...
வாயை கட்டி, வயிற்றை கட்டி ஒன்று இரண்டாக சேர்த்த பணத்தை முதலீடு செய்து, தங்களது வாழ்வை மேம்படுத்திக் கொள்ளலாம் என நினைக்கும் நடுத்தர மக்கள் மோசடி வலையில் சிக்கி பாழுங்கிணற்றில் விழுவது தொடர் கதையாகி கொண்டு தான் வருகிறது. இதற்கு சான்றான சம்பவம் தான் மதுரையிலும், திண்டுக்கலிலும் நடந்திருக்கிறது.
இரட்டிப்பு, கவர்ச்சி வார்த்தைகள்
மதுரை அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளில் FQL என்ற நிறுவனம் முதலீடு என்ற பெயரில் கவர்ச்சியான வார்த்தைகளை அள்ளி வீசியதாக சொல்லப்படுகிறது. 50 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்ததால் 1 லட்சம் ரூபாய் தருகிறோம், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 2 லட்சம் ரூபாய் தருகிறோம் என கவர்ச்சி வார்த்தைகளை அள்ளி வீசவே, அதிலிருக்கும் ஆழத்தை அறியாமல் 500க்கும் மேற்பட்டோர் தங்களது சேமிப்பு பணத்தை முதலீடு செய்ததாக சொல்லப்படுகிறது.

போராட்டம், தடியடி
இரண்டு மாதம் வட்டியை வழங்கிய அந்நிறுவனம் அடுத்தடுத்த மாதங்களில் வட்டியை கொடுக்காமலும், செலுத்திய பணத்தை கொடுக்காமலும் கம்பியை நீட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணத்தை பறி கொடுத்த மக்கள் அலங்காநல்லூர் காவல்நிலையம் முன்பாக திரண்டு நியாயம் கேட்ட நிலையில், போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துள்ளனர்.
அதோடு தங்களது பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்ட மக்கள் மேலூர் நான்கு வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

85,000 பேர் முதலீடு
அதே FQL நிறுவனம் திண்டுக்கல் மாவட்டத்திலும் கைவரிசை காட்டியுள்ளது. இந்த FQL செயலியில் 54,000 ரூபாய் முதலீடு செய்தால் 45 நாள்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும், தொடர்ந்து முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும் விளம்பரம் செய்ததாக தெரிகிறது. இதனை நம்பி நத்தம் மற்றும் ரெட்டியபட்டி, வத்திபட்டி, விளாம்பட்டி, என்.புதுக்கோட்டை, பட்டனம்பட்டி, மூங்கில்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த 85 ஆயிரம் பேர் 150 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக சொல்லப்படுகிறது.

பேச்சுவார்த்தை
இந்த செயலியில் முதலீடு செய்தவர்களுக்கு அமெரிக்க டாலர் கணக்கில் பணம் கிடைத்து வந்ததாக பரவிய தகவலை நம்பி பலரும் அச்செயலியில் பணத்தை invest செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அச்செயலியின் மூலம் கடந்த சில நாட்களாக பணத்தை எடுக்க முடியாததால் பதற்றமடைந்த மக்கள், அந்நிறுவனத்தில் பணியாற்றிய காசாம்பட்டியில் உள்ள ரமேஷ், விஜய் ஆகியோரின் வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது அவர்களின் வீட்டை சேதப்படுத்திய மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ரமேஷை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

காவல்துறை விளக்கம்
மயிலாடுதுறை மாவட்டத்திலும் இதே போல மோசடி நடந்துள்ளதாக மக்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்து, தங்கள் பணத்தை விரைந்து மீட்டுத்தர கோரியுள்ளனர். அப்பங்குளத்தை சேர்ந்த இடைத்தரகர் பேபி மற்றும் மதுரை கட்டையம்பட்டியைச் சேர்ந்த செல்வா ஆகியோர் கிராமத்தில் உள்ளவர்களிடம் பணம் பெற்று மாதம் மாதம் பணம் டெபாசிட் செய்ததை போல போலியான குறுஞ்செய்தியை அனுப்பி மோசடி செய்ததாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனிடையே, மதுரை மேலூர் நான்கு வழிச்சாலையில் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், இதுவரை 12 பேரை கைது செய்திருப்பதாக போலீசார் நேரில் விளக்கமளித்ததால் மக்கள் மறியலை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.

குவிந்து கொண்டே இருக்கும் புகார்கள்
மதுரை மாவட்டத்தில் ஆன்லைன் செயலி மோசடி குறித்து இதுவரை 7000 பேர் புகார் கூறி உள்ளனர். 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்ற ஆசையால் பணத்தை கட்டி இழந்த ஏராளமானவர்கள் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved