Also Watch
Read this
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் திரிசூலி ஆற்றில் ஏற்பட்ட பயங்கர வெள்ளப்பெருக்கு, ஒட்டுமொத்த பகுதியையுமே உலுக்கிப் போட்டுள்ளது. ஆனால், இந்தப் பகுதியில் இருக்கும் 40 வருட பழமைவாய்ந்த பச்சை நிற வீடு ஒன்று சேதமடையாமல் உறுதியாக நிற்கிறது. நம் கடைசி தினமே இதுதான் என்று அந்த வீட்டில் இருந்த ஆறு பேரும் உயிர் பிழைத்தது எப்படி? என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

நேபாள நாட்டில்...
திரிசூலி ஆற்றில் நீர்மட்டம் வேகமாக உயர்வது குறித்து எச்சரிக்கை செய்தி வந்தபோது, வீட்டின் உரிமையாளரான பிரகாஷ், வீட்டின் அருகே இருந்த கடையில் இருந்துள்ளார். ஆபத்தை உணர்ந்து உடனடியாக வீட்டிற்குள் ஓடிய அவர், உள்ளே இருந்த தனது குடும்பத்தின் 5 உறுப்பினர்களையும் உடனடியாக வெளியே வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அவர் மீண்டும் வெளியே வருவதற்குள் வெள்ளத்தின் சீற்றம் அவரது காரையே தலைகீழாகக் கவிழ்த்து போட்டது.

வீட்டின் மாடிக்கு...
இந்நிலையில், வெள்ளத்தின் வேகத்தைக் கண்டு அஞ்சிய குடும்பத்தினர், உடனடியாக வீட்டின் 4ஆவது தளத்திற்குச் சென்று தஞ்சம் அடைந்தனர். ஆனால், நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து 4ஆவது தளத்தையும் எட்டியதால், வேறு வழியின்றி கட்டிடத்தின் மொட்டை மாடிக்குச் சென்றனர்.

சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்திருந்த அந்த இக்கட்டான தருணத்தில், நமக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால், பள்ளிக்குச் சென்றிருக்கும் மகனின் நிலை என்னவாகும்? என்ற ஒரே எண்ணம்தான் பிரகாஷின் மனதை உலுக்கிக் கொண்டிருந்தது.

பேசு பொருளான பச்சைவீடு
அந்த பேய் வெள்ளத்தில், சுற்றியிருந்த மொத்த கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இந்த 40 ஆண்டு கால பழமையான பச்சை வீடு எப்படி தப்பியது? என்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. இதற்குப் பதிலளித்த பிரகாஷ், ’அன்றைய காலத்தில் சிமெண்ட் மற்றும் கட்டுமானப் பொருட்களின் தரம் மிக நன்றாக இருந்தது,’ என்று கூறினார்.

மேலும், ஆறு மிக அருகில் இருந்ததால், பாதுகாப்பைக் கருதி அதிக பணம் செலவழித்து, 2 முதல் 3 அடுக்கு சாலைக் கட்டுமான கற்களைப் பயன்படுத்தி வீட்டின் அடித்தளத்தை மிகவும் பலமாக அமைத்ததே வீடு தப்பியதற்கு காரணம் என கூறியுள்ளார்.

பாதுகாப்பாக மீட்பு
ஆனாலும், அடித்த வெள்ளத்தில் அவரது வீட்டின் கீழ் தளம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கிருந்த கடை மற்றும் சேமிப்புக் கிடங்கில் இருந்த பொருட்கள், இருசக்கர வாகனங்கள், ஸ்கூட்டர்கள் மற்றும் கார்கள் என அனைத்துமே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு புதைந்து போயுள்ளது.

ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்தில் நீர்மட்டம் சற்றே குறைந்ததும், அருகிலுள்ள சுங்கச் சாவடி பகுதியைச் சேர்ந்த மக்கள் மீட்புக்கு சென்றுள்ளனர். அவர்கள் கட்டிடங்களுக்கு இடையே ஒரு பெரிய குழாய் மற்றும் கயிற்றை கட்டி, ஆபத்தான முறையில் வீட்டில் சிக்கியிருந்த பிரகாஷின் குடும்பத்தினரைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

ஒரு குடும்பத்தை காப்பாற்றிய பெருமை
தற்போது பிரகாஷ் குடும்பத்தினர் பாதுகாப்பாக காத்மாண்டுவில் தங்கியுள்ளனர். நுவாகோட் - ரசுவா இடையேயான முக்கியச் சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமல், 1.25 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது .

எல்லாம் அழிந்துவிட்டது, ஆனால் மீண்டும் அதே இடத்தில் எங்கள் வாழ்க்கையைத் தொடங்கப் போகிறோம் என்ற நம்பிக்கை தெரிவிக்கிறது பிரகாஷ் குடும்பம்.

ரசுவா செல்லும் வழியில் கம்பீரமாக நிற்கும் இந்த பச்சை வீடு, இயற்கை சீற்றத்தின் வடுக்களுக்கு நடுவே, ஒரு குடும்பத்தை காப்பாற்றிய பெருமையோடு கம்பீர சாட்சியாக நிற்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved