Also Watch
Read this
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்திற்குட்பட்ட தேவிகாட் கிராமத்தை பெருவெள்ளம் சூறையாடிய பிறகு, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், கிராமமே சகதியால் சூழப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பிறகு ஊருக்குள் வந்துள்ள மக்கள் எஞ்சிய தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு அடுத்து என்ன செய்வது? என்று தெரியாமல் கலக்கத்துடன் செல்லும் காட்சிகள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துகிறது.

திரிசூலி ஆற்றின் வெள்ளம்
நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்திற்குட்பட்ட தேவிகாட் கிராமத்தை பெருவெள்ளம் சூறையாடியுள்ள கோரக் காட்சிகள்...
திரிசூலி ஆற்றில் வெள்ளபெருக்கு ஆரம்பித்த ரசுவா பகுதியில் இருந்து சுமார் 51 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நுவாகோட் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. நுவாகோட் மாவட்டத்தின் தேவிகாட் கிராமம் வழியாக பாயும் திரிசூலி ஆற்றின் வெள்ளம் கிராமத்தை முற்றிலும் சூறையாடியுள்ளது.

சுகாதார சீர்கேடு
சுமார் 10 மீட்டர் உயரத்திற்கு சீறிப்பாய்ந்த வெள்ளம் வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள், கோயில்கள் என அனைத்தையும் அடித்துக் கொண்டு சென்றுள்ளது. தரைதளம் மற்றும் முதல்தளத்தை முற்றிலும் மூடிய சகதியே வெள்ளத்தின் ஆக்ரோஷத்தை நமக்கு உணர்த்துகின்றன. வெள்ளம் வடிந்திருந்தாலும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட சகதி, கிராமத்தை சூழ்ந்துள்ள நிலையில், இறந்து கிடக்கும் கால்நடைகளால் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு உண்டாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கலங்கும் காட்சிகள்
சீறிப்பாய்ந்த வெள்ளத்தில் தப்பிப் பிழைத்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள், வெள்ளம் வடிந்த பிறகு ஊருக்கு திரும்பி எஞ்சியவற்றை எடுத்துக் கொண்டு கவலை தோய்ந்த முகங்களுடன் செல்லும் காட்சிகள் காண்போரின் கண்களை கலங்க செய்கின்றன. கிராமத்தில் ஏற்பட்ட சேதங்களை சீரமைத்து இயல்பு நிலை எப்போது திரும்பும் என பரிதவிப்புடன் உள்ள மக்களுக்கு காலம் ஒன்றே ஆறுதல் என தெரிகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved