Also Watch
Read this
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் அமைச்சர்கள் நான்கு பேர் பேச்சுவார்த்தை நடத்தினர். தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற உரிய நடவடிக்கை என அமைச்சர் ஆனந்த் உறுதி அளித்தார்.
கடந்த திமுக ஆட்சியால், அரசு கஜானா காலியாகி விட்டதாக அமைச்சர் ஆனந்த் கூறியதுடன், வெறும் கஜானா மட்டுமே உள்ளது, நிதி எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. முக்கிய 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர்கள் குழு அளித்த வாக்குறுதியை ஏற்று அறிவிக்கப்பட்டது.

ரிப்பன் மாளிகையில்...
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டட கிழக்குப் பகுதி வாயிலில் போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கஜானா காலி...
தூய்மை பணியாளர்கள் மத்தியில் அமைச்சர் என்.ஆனந்த் பேசியதாவது;
உங்கள் கோரிக்கைகள் எல்லாம் நியாயமானது தான். முந்தைய ஆட்சியில் கஜானாவையே காலி செய்துவிட்டு போய்விட்டனர். ஆனால் எல்லாவற்றையும் சரி செய்து முதல்வர் விஜய் உங்களுக்கு செய்து கொடுப்பார். உங்களது கோரிக்கைகள் அனைத்தும் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

கஜானாவே இல்லை...
அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது;
போன ஆட்சியில் கஜானாவை காலி செய்துவிட்டார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உண்மையில் கஜானாவையே காணவில்லை. இருந்தாலும் முதல்வர் விஜய் அனைத்தையும் செய்து கொடுப்பார். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் போராடிய தூய்மை பணியாளர்களுக்கு நன்றி. சொன்ன சொல்லுக்கு ஏற்ப நேர்மையான முறையில் போராடிய தூய்மை பணியாளர்கள் பொது பணியிலும் ஈடுபட்டனர். பணி நிரந்தரம் செய்ய சட்ட சிக்கல் இல்லை, நிர்வாக சிக்கல் உள்ளது; அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் முடிவு செய்யப்படும்

முதல்வருக்கு தூக்கம் இல்லை...
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது;
எங்களுக்கு கால அவகாசம் கொடுங்கள். நிச்சயமாக உங்களுக்கு தேவையானதை செய்து தருவோம். கடந்த ஆட்சிகளில் போராட்டம் நடத்த விடமாட்டார்கள். இரவோடு இரவாக தூக்கிக்கொண்டு போய்விடுவர். நம் முதல்வர் கண்டிப்பாக உங்களுக்கு தேவையானதை செய்வார். நீங்கள் கஷ்டப்படுவதை பார்த்து முதல்வர் வருத்தப்பட்டார். நீங்கள் கவலைப்பட வேண்டாம், இது உங்கள் ஆட்சி. எப்போது வேண்டுமானாலும் எங்கள் அலுவலகத்திற்கு வாருங்கள். எங்கள் அலுவலக கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்திருக்கும். நீங்கள் அனைவரும் உங்கள் குடும்பத்தினருடன் இருக்க வேண்டும், அதுதான் எங்கள் கோரிக்கை. நீங்கள் இங்கு இருக்கும்போது எங்களுக்கு தூக்கம் வருவதில்லை, குறிப்பாக எங்கள் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை. ஒவ்வொரு முறை எங்களைப் பார்க்கும்போது எதாவது செய்ய வேண்டும் என்று கூறுவார். இங்கு போராட்டத்தில் ஈடுபடும் யார் மீதும் கை வைக்கவோ, மிரட்டவோ கூடாது என முதல்வர் கூறியிருக்கிறார்.

உரிய நேரத்தில்...
அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது;
இது உங்களுடைய அரசு. உங்கள் அண்ணன் ஆட்சி செய்கிறார். உங்களுக்குச் செய்யாமல் வேறு யாருக்குச் செய்யப் போகிறார்? உங்களுக்கு என்ன தேவையோ, அதை உரிய நேரத்தில் முதல்வர் நிச்சயம் செய்து கொடுப்பார்.
இவ்வாறு அமைச்சர்கள் பேசினர்.

போராட்டம் ஒத்திவைப்பு
இந்த நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என உழைப்போர் உரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதி அறிவித்தார். மகப்பேறு விடுப்பு, மாதவிடாய் விடுப்பு போன்றவற்றை அக்.3ல் பேசவுள்ளதாகவும், 16 நாளாக நடைபெற்ற போராட்டம் தற்போதைக்கு ஒத்தி வைக்கப்படுவதாகவும் பாரதி தெரிவித்துள்ளார்.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved