Also Watch
Read this
மும்மொழிக் கொள்கையில் தீவிரமாக உள்ள மத்திய அரசு, ஹிந்தியை திணிப்பதை நோக்கமாக கொண்டிருப்பதாக குற்றம் சாட்டிய தமிழக அரசு, மத்திய அரசு attitudeஐ மாற்றிக் கொள்ளவில்லை என்றால் எதையுமே சாத்தியப்படுத்த முடியாது என வாதிட்டது. நவோதயா பள்ளிகள் விவகாரத்தில் மாநில அரசின் கொள்கை முடிவையும், கூட்டாட்சி தத்துவத்தையும் முன்வைத்து தமிழக அரசு வாதிட்ட நிலையில், மத்திய- மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

தமிழக அரசு மேல்முறையீடு
"ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு Jawahar Navodaya Vidyalaya நிலங்களை அடையாளம் காண வேண்டும்," என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு, நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது.

ஏற்க முடியாது - தமிழக அரசு
தமிழகத்தில் ஏற்கெனவே பள்ளிக் கட்டமைப்பு சிறப்பாக உள்ளதாகவும், சுமார் 1.25 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் இருமொழிக் கொள்கை சட்டப்பூர்வமான மாநிலக் கொள்கை என்றும், நவோதயா பள்ளிகள் மும்மொழிக் கொள்கையை அடிப்படையாக கொண்டிருப்பதால் அதனை ஏற்க முடியாது என்றும் தமிழக அரசு வாதிட்டது.

நீதிபதிகள் கருத்து
இதற்கு, கிராமப்புற மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க நவோதயா பள்ளிகள் உதவக்கூடும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். ஒரு திட்டம் பொதுப்பட்டியலில் இருக்கும்போது, அதனை ஏற்க மாநிலங்கள் மறுத்தால் கூட்டாட்சி அமைப்பு எவ்வாறு செயல்படும் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மொழி மட்டுமே பிரச்சினை என்றால், இந்திக்கு பதிலாக வேறு மொழியை மூன்றாவது மொழியாக கற்பிக்க முடியாதா?என்றும் நீதிபதிகள் வினவினர்.

தமிழக அரசு திட்டவட்டம்
’நவோதயா பள்ளிகள் தொடர்பான கொள்கையில் எந்த சமரசமும் செய்ய முடியாது,’ என திட்டவட்டமாக தெரிவித்த தமிழ்நாடு அரசு, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலான கல்வி நிதி தொடர்பான பிரச்சினையையும் முன்வைத்தது. ஆனால், கல்வி நிதி விவகாரம் தனியானது என கூறி மத்திய அரசு மழுப்பியது.

பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்
’இருதரப்பும் அமர்ந்து பேசி அனைத்து முரண்பாடுகளுக்கும் தீர்வு காண வேண்டும்,’ என அறிவுறுத்திய நீதிபதிகள், தமிழகத்தில் அரசு மாறியுள்ள நிலையில், அணுகுமுறையிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினர். நவோதயா பள்ளிகளை நிறுவுவதற்கான இடங்களை 3 மாதங்களுக்குள் அடையாளம் காண வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், மத்திய- மாநில அரசுகளின் உயர்மட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினர். அதேவேளையில் மாநில அரசின் கொள்கையையும் கருத்தில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் வலியுறுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved