Also Watch
Read this
By: Manigandan Raja
சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக, சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைமை நீதிபதியாக கேரள உயர் நீதிமன்ற நீதிபதியான சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமனம் செய்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஸ்ரீவஸ்தவா பதவி வகித்து வருகிறார். இவர், இன்றுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து உச்ச நீதிமன்ற கொலீஜியம் அடுத்த தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை பரிந்துரை செய்து இருந்தது.

ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவு
இந்த பரிந்துரை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில், பரிந்துரையை ஏற்ற திரவுபதி முர்மு சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.

கேரள ஐகோர்ட் நீதிபதி
ராய்ப்பூரை சேர்ந்தவர் சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி. கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர். இவரது சொந்த ஊர் சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூர். மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர். 1992ஆம் ஆண்டு முதல் வழக்கறிஞராக, மத்திய பிரதேச நீதிமன்றத்தில் பணியாற்றி வந்தவர்.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை வருமான வரித்துறை, வங்கி மற்றும் அரசு துறைகளில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2016ஆம் ஆண்டு மத்தியபிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2018ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, நாளை அல்லது நாளை மறுநாள், அவர் பதவி ஏற்பார் என்று தெரிகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved