Also Watch
Read this
Posted on: Mar 23, 2026 12:39 PM
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், 9 போலீசாரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
கொரோனா காலத்தில் கொடூரம்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் 59 வயதான ஜெயராஜ், இவரது மகன் 31 வயதான பென்னிக்ஸ். தந்தை, மகன் இருவரும் பஜாரில் செல்போன் விற்பனை, பழுது பார்க்கும் கடை வைத்திருந்தனர். 2020 ஜூன் 19ஆம் தேதி, கொரோனா ஊரடங்கு சமயத்தில், இரவில் நீண்ட நேரம் கடையை திறந்து வைத்திருந்ததாக, சாத்தான்குளம் போலீசார் தந்தை, மகன் இருவரையும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இருவரும் அடுத்தடுத்து மரணம்
அன்று இரவு போலீசார் விசாரணையில் இருவரையும் கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த தந்தை, மகன் இருவரும் மறுநாள் கோவில்பட்டி கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு 5 மணி நேர இடைவெளியில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசியல் கட்சியினர், சாத்தான்குளம் வியாபாரிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல்நிலையம், சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.
சிபிஐ விசாரணை
இந்த நிலையில், காவல்துறையினர் விசாரணையில் திருப்தி இல்லாததால், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவின்பேரில், 2020 ஜூன் 29ஆம் தேதி வழக்கு, சிபிஐக்கு மாற்றப்பட்டது. ஜூலை 7ஆம் தேதி சிபிஐ விசாரணையைத் தொடங்கியது. கொலை வழக்காக பதிவு செய்து அப்போதைய சாத்தான்குளம் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், சிறப்பு எஸ்.ஐ பால்துரை, போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், சாமத்துரை, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து மற்றும் பால்துரை ஆகிய 10 பேரை, சிபிஐ கைது செய்து, அனைவரையும் மதுரை மத்திய சிறையில் அடைத்தது.
9 பேர் மீது விசாரணை
விசாரணையின்போது பால்துரை உயிரிழந்தார். இதனால், மற்ற 9 பேர் மீதான வழக்கின் விசாரணை, மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 2020 டிசம்பர் 21ஆம் தேதி முதல், மதுரை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த விசாரணை பின்னர், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 2021 பிப்ரவரி 18ஆம் தேதி முதல் விசாரணை நடந்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் பெண் போலீசார் பியூலா, ரேவதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோரின் சாட்சியம், முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
சிபிஐ அறிக்கை தாக்கல்
இந்த வழக்கில், 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சிபிஐ தரப்பில், முதல் கட்டமாக 2,027 பக்கங்கள், இரண்டாம் கட்டமாக 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 6 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், மேலும் 6 மாத காலம் அவகாசம் கோரி, மாவட்ட நீதிமன்றம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஜெயராஜ் குடும்பத்தினர் விரைவாக தீர்ப்பு வழங்க வேண்டும் என, மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் மனு செய்தனர். மனுவை விசாரித்த அமர்வு, 3 மாத கால அவகாசம் தந்து, வழக்கை முடிக்குமாறு உத்தரவிட்டது.
மார்ச் 23ல் தீர்ப்பு
இந்த வழக்கை இறுதியாக விசாரித்த நீதிபதி ஜி.முத்துக்குமரன், அனைத்து தரப்பு வாதங்கள் மற்றும் குறுக்கு விசாரணை என்று, அனைத்தும் கடந்த 16ம் தேதி முடிந்த நிலையில், இன்று மார்ச் 23ஆம் தேதி மாலை தீர்ப்பு வழங்கப்படும் என்றார். இதன்படி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வாசித்தார்.
என்ன சொல்கிறது தீர்ப்பு?
* உயிரிழந்த ஜெயராஜ்க்கு இருதயம், நுரையீரல் பிரச்சனை இருந்தது
* கம்பு, கம்பி போன்ற ஆயுதங்களால் தாக்கியதாலே இறப்பு நடந்துள்ளதாக அரசு மருத்துவர்கள் பிரேத பரிசோதனை அறிக்கை
* சாத்தான்குளத்தில் போலீசார் கம்பு, கம்பியால் தாக்கியதாலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்பு
* உடல்நலக் குறைவு காரணமாக ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழக்கவில்லை
* ஆய்வாளர் ஸ்ரீதர் கூறியதாலேயே ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்துறை தாக்குதல்
* கைகளை கயிற்றில் கட்டி தொங்கவிட்டபடி தாக்குதல் என பிரேத பரிசோதனை அறிக்கை
* நாம் அடித்துப் பழகுவதற்கு அப்பா, மகன் கிடைத்து உள்ளனர்; இவர்களை அடித்து நாம் பயிற்சி எடுத்துக் கொள்வோம் என போலீசார் பேச்சு - சிபிஐ தகவல்
* காயமடைந்த தந்தை, மகன் அணிந்திருந்த ஆடைகள் வழக்கின் முக்கிய ஆவணம்
* ரத்தக்கறை படிந்த ஆடையை உறவினர்களிடம் கொடுத்து குப்பைத் தொட்டியில் போட போலீசார் கூறினர்
* ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை செய்யப்பட்டு உள்ளனர் - தடய அறிவியல் ஆய்வில் உறுதி
* தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் மீதான வழக்கு பொய் வழக்கு - விசாரணையில் தகவல்
* சிபிஐ தரப்பில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மை - நீதிமன்றம் உறுதி
* சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாரும் குற்றவாளிகள்
* ஆய்வாளர் ஸ்ரீதர்
எஸ்.ஐ.க்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், முருகன், முத்துராஜ்
காவலர்கள் சாமத்துரை, செல்லத்துரை, வெயில் முத்து, தாமஸ் ஆகியோர் குற்றவாளிகள்
* குற்றவாளிகள் 9 பேருக்கும் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வேண்டியது அவசியம்
* சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், மார்ச் 30ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும்
* குற்றவாளிகள் 9 பேரின் ஊதிய விவரம், சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved