Also Watch
Read this
கூட்டணிக்கு தலைமையாக பாஜகவை வைத்துக்கொண்டு, திமுக கூட்டணி கட்சிகளை அடிமை கட்சிகள் என்று இபிஎஸ் கூறலாமா? என அமைச்சர் சிவசங்கர் கண்டனம் தெரிவித்து உள்ளார். கூட்டணி கட்சிகளை தாமரை சின்னத்தில் போட்டியிட அனுமதித்துள்ள அதிமுகவுக்கு, பீகாரில் நிதிஷ்குமாருக்கு வந்த நிலைதான் ஏற்படும் என்றும் கூறி உள்ளார்.

அதிமுக நிலை
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் கூறி இருப்பதாவது;
திமுக உடன் கூட்டணி வைத்திருக்கும் கட்சிகளை அடிமைக் கட்சிகள் என விமர்சிப்பது தவறு. தேஜ கூட்டணிக்கு தலைமை பாஜக என்பது வெளிப்படையாக தெரிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகள், தாமரை சின்னத்தில் தான் போட்டியிட விரும்புகின்றன. பீகாரில் நிதிஷ்குமாருக்கு வந்த நிலை எடப்பாடி பழனிசாமிக்கு வரும். பாஜகவால் மாநில கட்சிகளுக்கு ஏற்பட்ட நிலை தான் அதிமுகவுக்கு வரும்.

பின்னால் இருக்கிறார் அமித்ஷா
என்ன தான் மேக்கப் போட்டு மறைத்தாலும், அதிமுகவின் ஒவ்வொரு அறிவிப்புக்கு பின்னாலும் அமித்ஷா தான் இருக்கிறார். அதிமுக கூட்டணியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தான் முடிவு எடுக்கிறார். அமித்ஷா தரும் ஸ்கிரிப்டை மாற்றாமல் அப்படியே படிக்கிறார் இபிஎஸ். மோடியா? லேடியா? என்று கேட்டு தேசிய கட்சியான பாஜகவுக்கு சவால் விட்டவர் ஜெயலலிதா. டெல்லி பாஜகவுக்கு ஒருபோதும் அடி பணிய மாட்டோம் என்று சொல்லிக் கொண்டு, மீண்டும் மீண்டும் இபிஎஸ் அடிபணிகிறார்.

உரிய மரியாதை
திமுக கூட்டணியில் அனைத்து கட்சிகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படுகிறது. மனம் ஒத்த கூட்டணியாக திமுக கூட்டணி அமைந்து உள்ளது. திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இணைந்ததால் திமுகவும் தொகுதிகளை குறைத்தே நிற்கிறது. சுயமரியாதையுடன் தன்மானத்துடன் இயங்கும் திமுக கூட்டணி, மாபெரும் வெற்றி பெறும். திமுக கூட்டணியை விமர்சிக்கும் தகுதி அதிமுகவுக்கு இல்லை. அதிமுக போட்டியிடக் கூடிய தொகுதிகளைக் கூட எடப்பாடி பழனிசாமியால் கூற முடியவில்லை.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved