Also Watch
Read this
Posted on: Mar 26, 2026 07:50 AM
2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு நிறைவேற்றப்படாத 439 வாக்குறுதிகளையே தேர்தல் அறிக்கையாக திமுக வெளியிடலாம் என்று, பாமக தலைவர் அன்புமணி விமர்சித்து உள்ளார்.

373 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை
இதுதொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது;
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக திமுக மீண்டும் ஒரு பொய் மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறது. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த திமுக, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தொடர்பாக இன்னுமொரு பொய்யைக் கூறி, மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால், அது கனவிலும் நடக்காது.

தேர்தல் வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றி விட்டோம், 99% நிறைவேற்றி விட்டோம், 90% நிறைவேற்றி விட்டோம், 85% நிறைவேற்றி விட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது அமைச்சரவை சகாக்களும் வாய்க்கு வந்தபடி பொய்களைக் கூறி வந்தனர். இந்த மோசடியை அம்பலப்படுத்தும் வகையில் திமுக அளித்த 505 வாக்குறுதிகளில், வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டும் தான் நிறைவேற்றி இருக்கிறது. 66% வாக்குறுதிகளை அரைகுறையாக நிறைவேற்றி விட்டு, 373 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பட்டியலிட்டு, விடியல் எங்கே? என்ற தலைப்பிலான ஆவணத்தைத் தயாரித்து கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி சென்னையில் வெளியிட்டேன்.

விளக்கம் தர வேண்டும்
இப்போது வேதாளம், மீண்டும் முருங்கை மரம் ஏறி 100% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது. கடந்த கால நாடகங்களைப் போலவே இந்த நாடகங்களும் எடுபடாது. திமுக அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டது என்றால்...
1. சமையல் எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் வழங்கப்பட்டு விட்டதா?
2. டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 குறைக்கப்பட்டு விட்டதா?
3. மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்பட்டு விட்டதா?
4. ஐந்தரை லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலையும், 50 லட்சம் இளைஞர்களுக்கு தனியார் வேலையும் வழங்கப்பட்டு விட்டதா?
5. மாதந்தோறும் மின் பயன்பாடு கணக்கிடப்பட்டு, ஆண்டுக்கு ரூ.6,000 அளவுக்கு மின் கட்டணம் குறைக்கப்பட்டு விட்டதா?

6. பேருந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டு விட்டனவா?
7. இடைநிலை ஆசிரியர்களுக்கு சமவேலைக்கு சம ஊதியம் நடைமுறைக்கு வந்து விட்டதா?
8. அரசுத் துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களும், பகுதிநேர
ஆசிரியர்களும் பணி நிலைப்பு செய்யப்பட்டு விட்டார்களா?
9. ஊரக வேலைத் திட்டத்தின் வேலை வழங்கப்படும் நாள்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்பட்டு விட்டதா?
10. மீனவர்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டார்களா? என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும்.

விடியல் எங்கே?
தமிழ்நாட்டிலேயே, ஏன் இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே மிகவும் மோசடியாக கட்சி என்றால் அது திமுக தான். 13% மட்டுமே தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், 100% வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன என்று கூறுவதன் மூலம், இதை திமுக மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டது. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த 505 வாக்குறுதிகளில் 439 வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாத திமுக, இந்தத் தேர்தலுக்கு புதிதாக தேர்தல் அறிக்கையை வெளியிடத் தேவையில்லை. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையே
தேர்தல் அறிக்கையாக வெளியிட்டு விடலாம். திமுக முழுமையாக நிறைவேற்றாத 439 வாக்குறுதிகளின் பட்டியலை நான் வெளியிட்ட "விடியல் எங்கே?" என்ற தலைப்பிலான ஆவணத்தைப் படித்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அன்புமணி தெரிவித்து உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved