Also Watch
Read this
2029ல் அரசியல் சூழல் மாறும்போது, நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு நீக்கப்படும் நாள் வரும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சட்டப்பேரவையில் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், அனிதாவின் மரணத்திற்கு நீதி கிடைக்க அரசியலை முன்னெடுப்போம் என்றார்.

இதற்கிடையே, அனிதா நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார். போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக அமைச்சர் ஆதவ் விளக்கம் அளித்தார்.

கூட்டுறவு விற்பனை இணையம் மூலம் வெங்காயம்
வெளிச்சந்தைகளில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு மூலமாக கொள்முதல் செய்து ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக அமைச்சர் வெங்கட் ரமணன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உறுதி
திருவண்ணாமலை அருணாச்சல மலை மற்றும் கிரிவலப் பாதை பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து அகற்றப்பட மாட்டார்கள் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதியளித்தார். அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 1,535 வீடுகள் மற்றும் கட்டடங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசிய திமுக உறுப்பினர் எ.வ.வேலு, அப்பகுதியில் உள்ள மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

பட்டு வளர்ச்சிக்காக ரூ.50 லட்சத்தில் மின் ஆளுமை மையம்
பட்டு வளர்ச்சிக்காக 50 லட்சம் ரூபாயில் மின் ஆளுமை மையம் மற்றும் ‘பட்டு செயலி’ உருவாக்கப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டு வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருட்கள் துறையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தஞ்சாவூரில் 10 கோடி ரூபாய் செலவில் கைவினைச் சுற்றுலா கிராமம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 முக்கிய நகரங்களில் கைவினைப் பொருட்களின் கண்காட்சிகள் 4 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காமராசருக்கு மெரினாவில் இடம் தர மறுப்பா?
காமராஜருக்கு மெரினாவில் அடக்கம் செய்ய இடம் மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் கூறியதற்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்துள்ளார். காமராஜர் மறைந்தபோது, காங்கிரஸ் தரப்பில் கோரிக்கை வைக்கும் முன்பே கலைஞர் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை செய்ததாக விளக்கம் அளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved