Also Watch
Read this
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை மக்களுக்கு பயனுள்ளதாக பயன்படுத்திட வேண்டும் என்று, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல்நாளான இன்று, கூட்டத்தொடருக்கு முன்னதாக நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி கூறியதாவது;

மழைக் காலமும், நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடரும் ஆக்கப்பூர்வமானதாக அமையும் என்று, நான் நம்புகிறேன். மழைக்காலக் கூட்டத் தொடரின் போது ஆக்கபூர்வமான, உண்மைகளின் அடிப்படையில் அமைந்த விவாதங்களில் உறுப்பினர்கள் ஈடுபட வேண்டும்.

மோதல்களை விட, உண்மைகளின் அடிப்படையில் முன் வைக்கப்படும் வலுவான வாதங்களுக்கே அதிக முக்கியத்துவம் உண்டு. ஆகவே, அர்த்தமுள்ள விவாதங்கள் நடைபெறும் என்று நான் நம்புகிறேன்.

அதேபோல ஒவ்வொருவரின் குரலும் அவையில் கேட்கப்பட வேண்டும். ஒவ்வொரு கருத்தும் மதிக்கப்பட வேண்டும். கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து எம்பிக்களும், அவையின் நடவடிக்கைகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும்.

விக்ரம்-1, ஹைட்ரஜன் ரயில்...
மேற்கு ஆசியாவில் போர் நிலவும் சூழலிலும் இந்தியாவின் பொருளாதாரம் 7.7% என்ற விகிதத்தில் வளர்ந்து வருகிறது. அனைத்து இந்தியர்களும் இதற்காக ஒன்றிணைந்து உழைப்பதாலேயே இது சாத்தியமாகி உள்ளது. பசுமை ஹைட்ரஜன் ரயிலைக் கொண்ட குறிப்பிட்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவின் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பே இதற்குக் காரணம். இந்தியாவின் விண்வெளி பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டது.

56 வயது இளைஞர் யார்?
நாட்டின் முதல் தனியார் தயாரிப்பு ஏவுகணையான 'விக்ரம்-1' பல்வேறு தொழில்நுட்ப சோதனைக்கு பின்னர் வெற்றிகரமாக புவியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்தியாவின் தனியார் விண்வெளித் துறை நிறுவனமான 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' இந்த சாதனையை செய்தது. விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்கள் மூலம் இத்தகைய வெற்றியை மிகச் சில நாடுகளே செய்து உள்ளன.

ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவன குழுவினரின் சராசரி வயது வெறும் 28 மட்டுமே. இது இந்திய இளைஞர்களின் திறனுக்கு சான்றாக உள்ளது. இத்தகைய சாதனையை நிகழ்த்தியது இவர்களைப் போன்ற இளைஞர்கள்தான். நான் ஏதோ ஒரு '56 வயது இளைஞரைப்' பற்றிப் பேசவில்லை.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.