Also Watch
Read this
மேடைக்கு மேடை ஆன்மீகம், கலாச்சாரம், அரசியல் ஒழுக்கம் என பக்கம் பக்கமாக பேசிவந்த பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம், பெங்களூரு பெண் நிர்வாகி அளித்த பாலியல் புகாரால் கட்சியிலிருந்தே அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளார். ஸ்ரீரங்கத்தில் சீட் வாங்கி தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்துவிட்டு ஏமாற்றிய விவகாரத்தில் இந்த நடவடிக்கை பாய்ந்திருக்கிறது.

அரசியல் அரிதாரம்...
டெல்லி மேலிடத் தலைவர்கள் சென்னை விமான நிலையத்தில் காலடி எடுத்து வைத்ததுமே, ஓடோடி சென்று பூங்கொத்துக்களை நீட்டி அவர்களுடன் போட்டோ எடுப்பதில் பிஸ்தாவாக வலம் வந்தவர் கருப்பு முருகானந்தம். மேடைகளில் ஒழுக்கம், ஆன்மீகம் என அனல் பறக்க அறப்போதனை செய்துவந்த இவரின் அரசியல் அரிதாரம், தற்போது வெடித்துள்ள பகீர் பாலியல் புகாரில் வெளுக்க தொடங்கியுள்ளது.

அம்பலமான போலித்தனம்
மேடைகளில் உத்தம சீலராக வேடமிடும் இவரின் அந்தரங்க கூத்துகள், திரைக்கதை எழுதி அரங்கேற்றப்பட்ட காதல் நாடகங்களையே விஞ்சும் வகையில் தற்போது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. பெங்களூரை சேர்ந்த பாஜக மாநில பிற்படுத்தப்பட்டோர் அணியின் பெண் நிர்வாகி ஒருவரிடம், 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வாங்கி தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியிருக்கிறார்.

பெங்களூருவில் வசிக்கும் அப்பெண்ணின் பிள்ளைகளின் பள்ளி படிவங்களிலேயே பாதுகாவலராக பெயர் சேர்க்கும் அளவுக்கு உத்தமரைப் போல நடித்திருக்கிறார் கருப்பு முருகானந்தம். ’அரசியலே போனாலும் நீதான் என் உயிர்,’ என நவரச நாடகமாடி உருகியிருப்பது, பொதுவெளியில் ஒழுக்கம் பேசும் இவரின் போலித்தனத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

படிப்படியாக சுயரூபம்
அறத்தின் வடிவம் போல வேடமிட்ட இந்த நயவஞ்சக அரசியல்வாதியின் அந்தரங்க நாடகங்கள் வெறும் பொய்யான கவிதை வசனங்களோடு நின்று விடவில்லை. திருமணம் செய்வதாக நம்பவைத்து உடலளவிலும், மனதளவிலும் விளையாடியதில் கர்ப்பமடைந்தார்.

கர்ப்பமடைந்தபோது விருப்பத்திற்கு மாறாக கருவை சிதைக்க கட்டாயப்படுத்திய போதுதான் அவரின் சுய ரூபம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. படிப்படியாக அவரது சித்திரவதைகள் தொடர தனக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு எதிராக நியாயம் கேட்க தொடங்கினார். இதனால் அப்பெண்ணுக்கும் அவரது குழந்தைகளுக்கும் கொ* மிரட்டல் விடுத்து அச்சுறுத்தியுள்ளார் இந்த மூத்த அரசியல்வாதி.

பாரதிய நியாய சன்ஹிதா, அதிரடி
இதனை சகித்து கொள்ளாத அந்த பெங்களூரு பெண், துணிச்சலாக களமிறங்கி, அனைத்து ஆதாரங்களுடனும் காவல்துறை பாதுகாப்புடன் பாஜக தேசிய தலைமைக்கும், மாநில தலைமைக்கும் புகார் மனுவை அனுப்பினார். பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை கோரி, அப்பெண் அளித்த புகார் மனு கமலாலயத்தின் கதவுகளை தட்டி, விவகாரம் பூதாகரமாக வெடித்த பிறகே கட்சித் தலைமை விழித்து கொண்டது.

புகாரின் வீரியத்தையும், அப்பெண் சமர்ப்பித்த வலுவான ஆதாரங்களையும் வைத்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், உடனடியாக ரெட் கார்டு வழங்கி, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி இவரை பொறுப்பிலிருந்து தூக்கி எறிந்திருக்கிறார்.

நவீன அரசியலின் வேடிக்கை
தான் செய்த பாவங்கள் அனைத்தும் அப்பெண் புகாரால் அம்பலமான அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் தவிக்கும் இந்த அரசியல்வாதி, தற்போது தப்புவதற்காக AI என்னும் நவீன கேடயத்தை பிடித்துக் கொண்டு கதறி வருகிறார்.

மாட்டிக் கொள்ளும் அத்தனை போலி யோக்கியர்களும், தங்களின் அசிங்கங்களை மறைக்க AI தொழில்நுட்பம் மீது பழியை போடுவது தற்போதைய நவீன அரசியலின் வேடிக்கையான உத்தியாகிவிட்டது. ’என்னை வீழ்த்த போலி புகைப்படங்களை AI தொழில் நுட்பத்தில் உருவாக்கிவிட்டார்கள்,’ என்று புலம்பிக்கொண்டு டெல்லி தலைவர்களான பி.எல்.சந்தோஷ், அரவிந்த் மேனன் கதவுகளை தட்டி இவர் போடும் நாடகம், எரிகிற தீயில் எண்ணெயை ஊற்றுவது போல அமைந்திருக்கிறது.

அரசியல் சாட்டையடி
30 ஆண்டுகள் RSS மற்றும் பாஜகவில் போலி தூய்மை பிம்பத்தை கட்டமைத்து வந்த ஒரு நபரின் உண்மையான சாயம், பெங்களூரு பெண் கொடுத்த புகாரினாலும், அதன்பின் இவர் சொல்லும் AI சாக்குகளாலும் வெளுத்துப் போய்விட்டது. மேடைக்கு மேடை கலாச்சாரத்தை பற்றிப் பாடம் எடுக்கும் கருப்பு முருகானந்தத்தின் போலி முகத்திரையை கிழித்தெறிந்திருக்கும் இந்த சம்பவம், கட்சி தொண்டர்களிடையே அருவருப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீரங்கத்தில் சீட் வாங்கி தருவதாக சீன் போட்ட ரோமியோவுக்கு, இறுதியில் சொந்த கட்சியிலேயே நிற்க சீட் இல்லாமல் போனதுதான் இவருக்கு கிடைத்த அரசியல் சாட்டையடி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved