Also Watch
Read this
விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து நடிகை லதா வெளியிட்ட வீடியோ சமூகவலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

விமான நிலையத்தில்...
பிரபல சீரியல் நடிகை லதா, ஹைதராபாத் செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது தனக்கு மாதவிலக்கு ஏற்பட்டதாகவும், தனது கைப்பையில் நாப்கினை எடுத்துச்செல்லாததால் பதற்றம் அடைந்ததாகவும் கூறியுள்ளார். வழக்கமாக பையில் நாப்கினை வைத்திருந்தாலும், இந்த தடவை அதை கொண்டு போகாததால் பதற்றம் தொற்றிக்கொண்டதாக தெரிவித்த லதா, விமான நிலையத்தில் கட்டண முறையில் நாப்கின் விநியோகிக்கும் திட்டம் இல்லை என்று அதிகாரிகள் கூறியதால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்ததாக வீடியோவில் பேசியுள்ளார்.

மிகவும் முக்கியம்
இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், 7ம் எண் கேட்டில் இருக்கும் மருந்தகத்தில் நாப்கின் கிடைக்கும் என்று கூறப்பட்டதால், ஒன்றாம் எண் கேட்டில் இருந்து ஓடிச்சென்று நாப்கின் வாங்கினேன். போர்டிங் தொடங்கிவிட்ட அந்த நேரத்தில் பயமும், பதற்றமும் என்னை ஆக்கிரமித்தது. பெண்கள் வீட்டில் இருந்து புறப்படும்போது சாவி எடுத்துவிட்டோமா? கேஸை ஆஃப் செய்துவிட்டோமா? என்று பார்ப்பதைப் போல பையில் நாப்கின் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டியது ரொம்ப முக்கியம் என்று கூறியுள்ளார்.

வைரல் ஆன விழிப்புணர்வு
மாதவிலக்கு என்பது ஒன்றும் வெளியில் சொல்லிக்கொள்ள முடியாத கேவலமான விஷயம் அல்ல என்று சொல்லியிருக்கும் நடிகை லதா, வெளியில் செல்லும் பெண்கள் முன் ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும் என்பதே தன்னோட நோக்கம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நடிகை லதாவின் இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை பகிரும் பலரும், அலுவலக வேலை, வெளியூர் பயணங்களின்போது முன் தயாரிப்போடு இருப்பது நல்லதுதான் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved