Also Watch
Read this
உடல்மொழி குறித்து முதலமைச்சர் விஜய் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென திருமாவளவன் அறிவுறுத்தி உள்ளார். மிசா குறித்த பேச்சை அமைச்சர் நிர்மல்குமார் வாபஸ் பெற வேண்டுமென்றும் வலியுறுத்தி உள்ளார்.

சுட்டிக்காட்டுகிறோம்...
இதுதொடர்பாக, விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது;
காவல்துறை மானியத்தில், முதல்வர் ஆற்றிய பதிலுரையின்போது, திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலினை கேலி செய்யும் வகையில், அவரது உடல்மொழி அமைந்திருந்ததாக கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், முதல்வர் தரப்பில் 'அது உள்நோக்கம் கொண்டதல்ல' என்று விளக்கம் சொல்லப்பட்டிருக்கிறது. எனினும், இதுபோன்ற 'உடல்மொழிகள்' கண்ணியமான அணுகுமுறை இல்லை என்பதையும் மனித மாண்புகளுக்கு எதிரானது என்பதையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுட்டிக் காட்டுகிறோம்.

ஒருபோதும் ஏற்புடையதல்ல...
எந்தவொரு சூழலிலும் ஒருவரின் 'தன் மதிப்பைக்' குறைத்து மதிப்பிடுவதோ, காயப்படுத்துவதோ நாகரிகம் ஆகாது. தனிநபர் ஒருவரின் மீதான அரசியல் விமர்சனங்கள் என்பது வேறு, தனிப்பட்ட முறையில் ஒருவரின் தன் மதிப்பைக் காயப்படுத்தும் விமர்சனங்கள் என்பது வேறு. கல்வி, பொருளாதாரம், அதிகாரம் போன்ற வலிமையில்லாத எளிய மனிதரையும் கூட காயப்படுத்தும் அணுகுமுறை ஒருபோதும் ஏற்புடையதல்ல.

மிகுந்த கவனமுடன்...
அகவையில் மூத்தோரை மதிப்பது மனித மாண்புகளில் மிகவும் உயர்ந்தது. மாண்பு நிறைந்த ஒரு மகத்தான பொறுப்பிலுள்ள முதலமைச்சர், இனிவரும் காலத்தில் தனது உடல்மொழியில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நலம் பயப்பதாகும்.

அமைச்சரின் கருத்து வரலாற்றுப்பிழை
முதல்வரின் பதிலுரையையொட்டி அடுத்தநாள் திமுக தரப்பில் முதல்வரின் உரையில் சில பகுதிகளை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த விவாதத்தின் போது இடைமறித்து சட்டத்துறை அமைச்சர் கூறிய கருத்து வரலாற்றுப் பிழை.

மிசா காலத்து அரச பயங்கரவாதம் எத்தகையது என்பது நாடறிந்த ஒன்று. அந்தக் கொடிய ஒடுக்குமுறைக்கு உள்ளான திமுக தலைவர் குறித்து முற்றிலும் தவறான கருத்தினைப் பதிவு செய்தது கண்டனத்துக்கு உரியதாகும். அமைச்சர் அதனை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு திருமாவளவன் கூறி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved