Also Watch
Read this
சென்னை, கொளத்தூரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பரப்புரை செய்ததாக புகார் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

கொளத்தூரில் விஜய் பிரச்சாரம்
சென்னை, கொளத்தூரில் நேற்றைய தேர்தல் பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், 5 ஒலி பெருக்கிகளுக்கு அனுமதி அளித்த நிலையில் 30 ஒலி பெருக்கிகளை பயன்படுத்தி, விதிமீறலில் ஈடுபட்டதாகவும் வழக்கு பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தேர்தல் சிறப்பு கண்காணிப்பு பிரிவில் உள்ள அதிகாரி குமார் அளித்த புகாரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வீடியோ பதிவு ஆதாரங்கள் உடன் அதிகாரி குமார் புகார் அளித்து உள்ளார்.

பெரம்பூரில் தவெக விஜய் வேட்பு மனு தாக்கல்
பெரம்பூர் மூலக்கடை பகுதியில், தவெக தலைவர் விஜயின் பிரச்சார வாகனம் சென்றபோது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெரம்பூரில் வேட்பு மனு தாக்கல் முடிந்து, கொளத்தூர் தொகுதிக்கு தவெக தலைவர் விஜய் வந்தபோது அங்கு அதிகமாக பொது மக்கள் திரண்டதால் போக்குவரத்து, மேலும் பாதிக்கப்பட்டது, இதனால், அவரது வாகனம் மெதுவாக ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

போலீசார் அறிவுறுத்தல், கூட்டம் ரத்து
இந்த நிலையில், சில நிமிடங்களில் பரப்புரையை முடிக்க காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். இந்த சூழலில், அடுத்ததாக வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த தெருமுனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

விஜய் மீது வழக்கு பதிவு
இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட புகாரில், விஜய் பங்கேற்கும் கூட்டங்களுக்கு போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதற்கிடையே தான், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் விஜய் உள்ளிட்ட சுமார் 500 பேருக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved