Also Watch
Read this
பாஜக வேட்பாளர்கள் வருகிற 4ஆம் தேதி வேட்புமனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.

இபிஎஸ் தலைமையில் கூட்டணி
இதுதொடர்பாக, நயினார் நாகேந்திரன் கூறியதாவது;
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோருடன், தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெறும். திமுக கூட்டணியின் மீது கடுமையான அதிருப்தியில் மக்கள் உள்ளார்கள். இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல் தமிழகம் வருகிறார். அதனை தொடர்ந்து வேட்பாளர் பட்டியல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெறும். நெல்லையில் அதிமுக போட்டியிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்கள். அதன் அடிப்படையில் அதிமுகவிற்கு அந்த தொகுதியை, பாஜக விட்டுக் கொடுத்துள்ளது. அதற்கு பதில் அதிமுக போட்டியிட்ட சாத்தூர் தொகுதியை பாஜக கேட்டு பெற்றுள்ளது. தொகுதிகள் குறைவாக உள்ளது என்பது முக்கியமல்ல, மக்களின் எண்ணம் தான் முக்கியம்.

பாஜக தேர்தல் அறிக்கை
தமிழக மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மீது அதிகமான நம்பிக்கை வைத்துள்ளனர். கொள்கைக்காகவும் தேசத்திற்காகவும் உழைக்கும் கட்சி பாஜக. அதில் இருப்பவர்கள் அதிருப்திக்கு இடம் அளிக்க மாட்டார்கள். பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஊரில் இல்லாத நிலையில் தான் பிரதமர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. நானும் நான்காம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளேன். அன்றைய தினம் பிரதமர் வருகிறார். இன்று மாலை திமுக மீதான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனை பியூஸ் கோயல் வெளியிடுகிறார். இதுதான் எங்கள் தேர்தல் அறிக்கை. கடந்த தேர்தலுக்காக திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஹீரோ என்றும் இந்த தேர்தல் அறிக்கை ஹீரோயின் என்றும் தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் கடந்த திமுகவின் தேர்தல் அறிக்கை ஹீரோ மாதிரி இருந்தது, இந்த தேர்தலுக்கு ஜீரோவாக உள்ளது.

விஜய் பிரச்சாரம், ஆதரவு
இந்த தேர்தல் அறிக்கையை ஹீரோயின் என தமிழக முதலமைச்சர் சொல்லி வருகிறார். ஆனால் அது ஹீரோயின் அல்ல, தமிழகம் முழுவதும் கெராயின் தான் உள்ளது. விஜய் பிரச்சாரத்திற்கு உரிய பாதுகாப்பு கொடுக்கவில்லை என அவர்கள் கூறி வருகிறார்கள். திமுகவை தவிர வேற எந்த கட்சிக்கும் பாதுகாப்பு கொடுப்பதில்லை. அவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சி நடத்துவதற்கு பிரச்சாரம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. நீதிமன்றம் வரை சென்று தான் அனுமதியை மற்ற கட்சிகள் பெறக்கூடிய நிலை இருந்து வருகிறது. திமுக கூட்டணியில் திருமாவளவன், அதிருப்தியில் இருப்பதாக அவரே சொல்லி வருகிறார். இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved