Also Watch
Read this
By: Manigandan Raja

குத்துச்சண்டை பிரிவில் 5 பதக்கங்களை உறுதி செய்து அசத்தல்
கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் நேற்று ஒரே நாளில் இந்தியாவுக்கு மேலும் 5 பதக்கங்கள் உறுதியாகி உள்ளன. குத்துச்சண்டை பிரிவில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 5 பேர் காலிறுதிச் சுற்றில் வெற்றிபெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளனர்.
இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் சாக்ஷி சௌதரி மகளிர் 51 கிலோ எடைப் பிரிவிலும், அருந்ததி சௌதரி 70 கிலோ எடைப் பிரிவிலும் வெற்றிபெற்றனர். அதேபோல, ஆடவர் பிரிவில் சச்சின் சிவாக் 60 கிலோ எடைப் பிரிவிலும், அன்குஷ் சீஷெல்ஸ் 80 கிலோ எடைப் பிரிவிலும், நரேந்தர் 90-க்கும் அதிகமான எடைப் பிரிவிலும் வெற்றி பெற்றனர்.
சிட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியா ஏமாற்றம்
சிட்டி ஓபன் எனப்படும் முபதாலா டிசி ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்ற போட்டியில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி - நியூசிலாந்தின் மைக்கேல் வீனஸ் ஜோடியும், பிரிட்டனின் ஜூலியன் கேஷ் - லாய்டு கிளாஸ்பூல் ஜோடியும் மோதின. இதில், சிறப்பாக விளையாடிய பிரிட்டன் ஜோடி 6-க்கு 3, 6-க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியது. இந்தியாவின் யூகி பாம்ப்ரி ஜோடி தோல்வி அடைந்து வெளியேறியது.
வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு லிட்டன்தாஸ் கேப்டன்
வங்கதேச கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ், ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஏற்கெனவே டி20 அணியின் கேப்டனாக ஏற்கனவே நியமிக்கப்பட்டிருந்தார்.

தற்போது ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச அணியின் கேப்டனாக மெஹிதி ஹசன் இருந்த நிலையில், அவர் நீக்கப்பட்டு தற்போது லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். 2027 ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரை இவர் கேப்டனாக இருப்பார் என வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.